பதிவு செய்த நாள்
23
செப்
2018
10:09
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில், ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று தரிசித்து, வழிபாடு நடத்தினர். புரட்டாசி மாதத்தில், வைணவர்கள், பெருமாளுக்குரிய வழிபாடுகளையும் விரதங்களையும் மேற்கொள்வது வழக்கம். பெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், புரட்டாசி சனி வழிபாடு, வெகு விமரிசையாக நடக்கும். வைணவர்கள், புரட்டாசி சனிக்கிழமை அன்று, தங்கள் வீடுகளில், பெருமாளை நினைத்து, மாவிளக்கேற்றுவது மரபு. புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று, அக்கம் பக்கத்து வீடுகளில், யாசகம் பெற்று, அந்த அரிசியில், உருண்டை செய்து, அதில், மாவிளக்கு ஏற்றி, கோவிந்தா நாமதத்துடன் வழிபட்டனர்.
சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, வடை முதலியன நிவேதனம் செய்து, உறவினர்களுக்கு விருந்தளித்தனர். நேற்று, பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று, பெருமாளுக்கு அர்ச்சனை, அபிஷேகம், அன்னதானம் செய்து வழிபட்டனர். தி.நகர் வெங்கடாச்சலபதி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள், மாதவப் பெருமாள், திருமழிசை ஜகன்நாத பெருமாள், திருநீர்மலை ரங்கநாத பெருமாள், பாரிமுனை சென்ன கேசவ பெருமாள் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன. பல பெருமாள் கோவில்களில், அதிகாலை விஷ்வரூப தரிசனம், சுப்ரபாத சேவை, சிறப்பு திருமஞ்சனம், மூலவருக்கு அபிஷேக ஆராதனை, மலர் அலங்காரம் உள்ளிட்டவை நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.