பதிவு செய்த நாள்
23
செப்
2018
11:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், துாப்புல் வேதாந்த தேசிகனின், 750வது வார்ஷீக மஹோத்ஸவம், கந்தபொடி வசந்தம், தீபப்பிரகாசருக்கு விமான உற்சவத்துடன் நிறைவு பெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள வேதாந்த தேசிகன் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், திருவோண நட்சத்திர வார்ஷீக மஹோத்ஸவம், 11 நாள் நடைபெறும். அதன்படி, 750வது வார்ஷீக மஹோத்ஸவம், 12ல் துவங்கியது. தினமும், காலையில், தங்கப் பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். ஏழாம் நாளான்று தேரோட்டம் நடந்தது.
நேற்று முன்தினம் காலை, விளக்கொளி பெருமாள் மங்களா சாஸனமும், தேவாதிராஜன் பெரிய தங்கப் பல்லக்கில் பேரருளாளன் மங்களா சாஸனத்திற்கு அஞ்சலித் திருக்கோலத்தோடு எழுந்தருளினார். இரவு, புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளிய வேதாந்த தேசிகன், வரதர் கோவில் மாட வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். நேற்று காலை, தீபப்பிரகாசருக்கு விமான உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.