பதிவு செய்த நாள்
24
செப்
2018
11:09
மும்பை: மஹாராஷ்டிராவில், விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் விழா, நேற்று (செப்., 23ல்) விமரிசையாக நடந்தது. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 13ல், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்று, மஹாராஷ் டிரா முழுவதும், பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, தொடர்ந்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், விழாவின், 11வது நாளான நேற்று (செப்., 23ல்), விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.இதையடுத்து, மும்பையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. மும்பையின் கிர்காவ்ம், ஜுஹு, தாதர் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரைகளில், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. புனே, நாசிக், சோலாபூர், கோலாபூர், அவுரங்காபாத் ஆகிய மாவட்டங்களிலும், விநாயகர் ஊர்வலம் நடந்தது.இந்த ஊர்வலத்தின் போது, அதிக சத்தத்தை ஏற்படுத்தும் நவீன ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலிபரப்ப, மாநில அரசு தடை விதித்து இருந்தது.இந்த தடையை விலக்க கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். எனவே, அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தாமல், ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது.