பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
ராசிபுரம்: ராசிபுரம் வள்ளலார் கோவில், கூனவேலம்பட்டிபுதூர் பாலசுப்ரமணியர் கோவிலில், தைப்பூச விழா, நாளை (ஃபிப்., 7) கோலாகலமாக நடக்கிறது. ராசிபுரம் அடுத்த கட்டநாச்சம்பட்டி சாலையில், வள்ளலார் கோவில் உள்ளது. இங்கு, வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் சார்பில், தைப்பூச திருவிழா நாளை (பிப்., 7) நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு அகவல் பாராயணம், 8 மணிக்கு கோவில் பிரகாரத்தை சுற்றி ஜோதி ஊர்வலம், கொடியேற்று விழா நடக்கிறது. அதை தொடர்ந்து, முதுகலை தமிழாசிரியர் கலியமூர்த்தி தலைமையில், ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. காலை 9.30 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு முதுகலை தமிழாசிரியர் கலைக்கண்ணன் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துகிறார். விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
* ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டிபுதூரில் உள்ள பாலசுப்ரமணியர் கோவிலில், தைப்பூசத் திருவிழா நேற்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 10 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (பிப்., 7) அதிகாலை 5 மணிக்கு, ஸ்வாமிக்கு திருக்கல்யாணம், அகல் விளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, ஸ்வாமி ரதம் ஏறுதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. பிப்ரவரி 8ம் தேதி இரவு 8 மணிக்கு, சத்தாபரணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.