பதிவு செய்த நாள்
01
அக்
2018
11:10
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ராஜகோபுரம் கட்டும் பணி முடிந்து, அவற்றுக்கு வண்ணம் பூசும் பணி நடக்கிறது. அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம் இறுதிக்குள், கும்பாபிஷேகம் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக, கோவில் அதிகாரி தெரிவித்தார். அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக, திருத்தணி முருகன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட பல மாநில பக்தர்கள் வருகின்றனர். தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மூலவரை தரிசிக்கின்றனர். இந்நிலையில், முருகன் கோவிலுக்கு, ராஜகோபுரம் அமைக்கும் பணி, 2009 நவ., 18ல், இந்து அறநிலைய துறை அனுமதியுடன் துவங்கப்பட்டது. முதலில், 25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயரத்திற்கு, ஒன்பது நிலை ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நடப்பட்டது.
கடந்த, 2011க்குள் முடிக்க திட்டமிட்டிருந்த ராஜகோபுர பணிகள், பல பிரச்னைகளால், கிடப்பில் போடப்பட்டன. இதையடுத்து, ஏழு ஆண்டுகளுக்கு பின், 2017ல், ராஜகோபுர பணி மீண்டும் துவங்கியது. தற்போது, ஒன்பது நிலை கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, நிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி நடக்கிறது. இதுவரை, மேற்பகுதியில் இருந்து மூன்று நிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி முடிந்துள்ளது. மீதமுள்ளவற்றுக்கு வண்ணம் பூசும் பணி துரித வேகத்தில் நடக்கிறது. இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்ஹாரத்தின் மீது, ஒன்பது நிலை கோபுரங்கள் கட்டும் பணி முடிந்து தற்போது, ராஜகோபுரத்திற்கு வண்ணம் பூசும் பணியும், சிலைகள் அமைக்கும் பணியும் துரித வேகத்தில் நடக்கின்றன. நேற்று முன்தினம் வரை, மூன்று நிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியும், மின்விளக்குகள், இடிதாங்கி கருவியும் பொருத்தப்பட்டுள்ளன. ராஜகோபுரம் கட்டும் ஸ்தபதி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜவேல் என்பவர், மீதமுள்ள நிலைகளுக்கு வண்ணம், சிலைகள் அமைக்கும் பணியை, வரும் தீபாவளிக்குள் முடிப்பதாக உறுதி கூறியுள்ளார்.
தொடர்ந்து, கோபுரம் அருகே, கல்தரை போடும் பணி மற்றும் கோபுரம் வழியாக மலைக்கோவிலில் உள்ள தேர் வீதிக்கு பக்தர்கள் செல்ல படிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, ஓரிரு நாளில் திட்ட மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் விட்டு, மூன்று மாதங்களில் பணி முடிக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடைசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில், ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.