கி.பி. 1206 -ம் ஆண்டில் பூரியைத் தலைநகராகக் கொண்டு அன்றைய ஒரிசாவை ஆட்சி புரிந்தவன், ‘லங்குல நரசிம்மதேவன்’ என்ற கங்கவம்ச மன்னன். ஒரு சமயம் இவனுக்கு பிரம்மன் பூஜித்த கிருஷ்ண விக்ரகம் கிடைக்கப் பெற்றதால், அதை ‘ஸப்தஸரா’ நதிக்கரையில் உள்ள ‘ரெமுனா’ என்ற திருத்தலத்தில் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தான். இங்குள்ள கருவறையில் இறைவன் எட்டு தோழிகளுடன் நின்ற திருக்கோலத்தில் அதி அற்புதமாகக் காட்சி தருகிறார். இவரை ‘கோபிநாத்’ என்று அழைக்கிறார்கள். இங்கு பகவானுக்கு காலை முதல் மாலை வரை பலவிதமான நிவேதனங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இதில் இரவில் நடைபெறும் பூஜையில் நைவேத்தியமாகப் பன்னிரண்டு கலசங்களில் அளிக்கப்படும் பால்பாயசம் மிகவும் பிரசித்தி பெற்றது. இப்பாயசத்தை ‘அமிர்தகேலி’ என்று அழைத்து மகிழ்கிறார்கள்.