பதிவு செய்த நாள்
05
அக்
2018
05:10
உண்மையான அன்பும் உண்மையான அறிவும் மலர்ந்த ஓர் உன்னதமான நிலைக்குப் பெயர் தான் ஞானம். நம்முயற்சியால் மட்டுமே எல்லாம் நடக்கிறது! என்ற மயக்கத்திலிருந்து விடுதலையாகி, எல்லாம் வல்ல ஏக இறைவனின் இயற்கைச் சக்தியை உணர்ந்து, அதனிடம் நம் வாழ்வை ஓப்புக்கொடுக்கும் ஓர் ஓப்பற்ற நிகழ்வே ஞானம். அவ்வாறு சரணடைந்த நாளே ஞானமடைந்த நாள். உலக வாழ்க்கை என்னும் திருவிழாக் கூட்டத்தில் தன் தாயைத் தவறிவிட்டுத் தவித்துக் கொண்டிருந்த குழந்தை, மீண்டும் தன் தாயைக் கண்டுபிடித்தவுடன் அடையும் மகிழ்ச்சியே ஞானத்தில் பொங்கும் மகிழ்ச்சியாகும். அன்பும் அறிவும் கூடிக் கலக்கும் ஆனந்தக்குளியலே ஞானம், அறிவாகிய வெப்பமும், அன்பாகிய குளிர்ச்சியும் சந்தித்து ஓர் இன்பமான மின்சார உணர்வை உற்பத்தி செய்யும் அதிசயமே ஞானம். கேள்வியும் பதிலும் ஒன்று சேரும் மையம். நல்வினைப் பதிவுகளும் தீவினைப் பதிவுகளும் ஒன்றாய் வந்து சரணடையும் மையம். காரணமும் காரியமும் கட்டிப்பிடித்துக் கொள்ளும் காதல் மையம். இருவினை ஒப்பு மையம். விருப்பும் வெறுப்பும் ஒன்றாய்க் கலந்து இரண்டும் காணாமல் போகும் நடுவுநிலை மையம். அத்தகைய ஓர் அருமையான மையமே ஞானமையம்.
நம் மனம் ஞானம் என்ற மையத்தை அடைந்தவுடன் , அதுவரை சுமந்து வந்திருந்த, ஆசைகள்.... அழுத்தங்கள்....பற்றுகள்.... வினைப்பதிவுகள்...... சந்தேகங்கள் உள்ளிட்ட அத்தனை இகலோகச் சுமைகளையும் இறக்கி வைத்துவிட்டு, உஸ் அப்பாடா!...... என்று ஒய்வு கொள்ளும். அதன்பிறகு, உடல்நோயின் காரணங்கள் வெளியாவதால் உடல்நோய்கள் காணாமல் போகும். மனக் குழப்பங்களின் காரணங்கள் வெளியாவதால் உடல்நோய்கள் காணாமல் போகும். மனக் குழப்பங்களின் காரணங்கள் வெளியாவதால் மனக்குழப்பங்கள் நீங்கும். மனம் தெளிவும் மலர்ச்சியும் அடைந்தவுடன் மகாலட்சுமியை வரவேற்கும் பொருளாதாரப் பாதை திறந்து கொள்ளும்.
சூது...... வாது...... மந்திரம் ......தந்திரம்... என அத்தனை இருட்டு வித்தைகளிலிருந்தும் மனம் விடுதலையாகி உண்மையை இறுகப் பற்றிக்கொள்ளும். இதனால், சூரியன், சந்திரன், பிறகோள்கள், நட்சத்திர மண்டலம் உள்ளிட்ட இந்தப் பிரபஞ்சம் முழுமைப் பொருளாய் அதாவது விஸ்வரூபக்காட்சியாய்த் தோன்றும். மகான்களை அடையாளம் தெரியும். திருமுறைகளின் உள் அர்த்தம் புரியும். பிறருடைய கருத்துகளை வாங்கித் தொட்டியில் நிரப்பி, அதிலிருந்து அள்ளி வழங்கும் செயற்கைப் பேச்சுமாறி, உண்மை ஊற்று உள்ளிலிருந்து பொங்கிப் பிரவாகம் எடுக்கும். அழுத மழையாக நம் பேச்சு வெளியாகும். இயற்கையுடன் இணக்கம். மனித நேயம். பிற உயிர்கள்மீது கருணை கொள்ளும் ஜீவகாருண்யம் என ஞானத்தின் வெளிப்பாடுகள் பல. எனவே, ஞானம்! இந்தப் புவியிலிருந்து விடுதலை பெறுவதற்குரிய கடைசிப்படி, முக்திக்குரிய முதற்படி, உணர்ந்து, முயன்று ஞானம் பெறுவோம்!