பதிவு செய்த நாள்
07
அக்
2018
12:10
நாகர்கோவில்:மன்னர் கால வழக்கத்தை நினைவு கூரும் நவராத்திரி பவனி இன்று பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்படுகிறது. இதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை சிலை பல்லக்கில் நேற்று காலை புறப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தலைநகராக பத்மனாபபுரம் விளங்கி வந்த நிலையில்,1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் ,நிர்வாக வசதிக்காக அதை திருவனந்தபுரத்துக்கு மாற்றினார். எனினும் நவராத்தி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி கோயில் சிலை பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டு நவராத்திரி பூஜை நடைபெற்றது.
மன்னர் கால வழக்கம் மாறாமல் அக். 10-ல் தொடங்க உள்ள நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து இன்று காலைபவனி புறப்படுகிறது. யானை மீது சரஸ்வதிதேவி, பல்லக்குகளில் முருகன் மற்றும் முன்னுதித்த நங்கை சிலைகள் எடுத்து செல்லப்படுகிறது. இதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சிலை நேற்று காலை புறப்பட்டது. கோயில் முன் தமிழக கேரள போலீசின் அணிவகுப்பு மரியாதைக்கு பின் பவனி புறப்பட்டது. இதில் நடிகர் சுரேஷ்கோபி எம்.பி., எஸ்.பி. ஸ்ரீநாத், தேவசம்போர்டு இணை ஆணையர் அன்புமணி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த சுரேஷ்கோபி எம்.பி., சபரிமலை விஷயத்தில் மதநம்பிக்கையை காப்பாற்ற சாகும்வரை போராட தயாராக இருப்பதாக கூறினார்.