காஞ்சிமடத்தில் மகாசுவாமிகளை தரிசிக்க பக்தர்கள் வரிசையில் நின்றிருந்தனர். ஏழு வயது சிறுவன் ஒருவன் அங்கு வந்தான். நிறைய பக்தர்கள் சுவாமிகளை தரிசிக்க வருவதால் ’அவர் பெரிய பிரமுகர் தான்’ என்ற எண்ணம் கொண்டவனாக சுவாமிகளின் முன் பவ்யமாக நின்றான். என்ன விஷயம் என்று கேட்பது போல பார்த்தார் சுவாமிகள். தயக்கமின்றி, “எனக்கு உங்களின் கையெழுத்து வேண்டும்” என்று நோட்டை நீட்டினான். சுவாமிகள் எதிலும் கையெழுத்திடும் வழக்கமில்லை. ஆனாலும் சிரித்தபடி, “எதற்கு கையெழுத்து கேட்கிறாய்?” என்றார். “நான் பிரபலங்களின் கையெழுத்தை சேகரிக்கிறேன். உங்களைப் பலரும் தரிசிக்க வருவதால் நீங்களும் பெரிய பிரமுகர் தானே? அதனால் தான் கேட்கிறேன்” என்றான். பக்தர்கள் சிரித்தனர். சுவாமிகளும் கலகலவென சிரித்தார். மடத்தின் காரியதரிசியைக் கூப்பிட்டு, “இந்தப் பையனோட நோட்டுல மடத்து சீல் போட்டு ’நாராயண நாராயண’ என்று எழுதி கையெழுத்திட்டுக் கொடு” என்றார். காரியதரிசியும் கையெழுத்திட சிறுவனுக்கு ஒரே சந்தோஷம். விடைபெறத் தயாரானான். “கொஞ்சம் பொறு” என சுவாமிகள் சொல்ல சிறுவன் நின்றான். காரியதரிசியிடம் மடத்து ரிஜிஸ்டரை எடுத்து வரச் சொல்லி,“எனக்கும் உன்னோட கையெழுத்து வேணும். இந்த ரிஜிஸ்டரில் கையெழுத்திடு” என்று சிறுவனிடம் நீட்டினார். அவனும் மகிழ்ச்சியுடன் கையெழுத்திட்டு விடைபெற்றான். அங்கிருந்த பக்தர்களிடம், “அந்தப் பையன் என்னை முக்கியமானவனாக நினைக்கிறான். அதனால் தான் கையெழுத்து கேட்டான். தானும் முக்கியமானவன் என்ற எண்ணம் அவனுக்கும் வரணும். அப்போது தான் வாழ்க்கையில் முன்னேறுவான். அதனால் அவனிடமும் கையெழுத்து வாங்கினேன். உலகத்திலுள்ள எல்லோரும் முக்கியமானவர் தான். முக்கியம் இல்லாதவர் என்று யாருமில்லை” என்றார். அதைக் கேட்ட பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். திருப்பூர் கிருஷ்ணன்