பதிவு செய்த நாள்
10
அக்
2018
10:10
திருநெல்வேலி: தாமிரபரணி புஷ்கரவிழா நாளை துவங்க உள்ளதையடுத்து, கடைசி வரை அரசு விழாவாக அறிவிப்பு இல்லாததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில், தாமிபரணி நதியின் மகாபுஷ்கர விழா, நாளை துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கர விழா நடக்கிறது. இந்த விழாவில், பாபநாசம் படித்துறையில் துவங்கி, கடலில் கலக்கும் புன்னகாயல் வரை உள்ள, 149 முக்கிய படித்துறைகளில் பக்தர்கள் நீராடவும், வழிபாடு செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை காலை, 11:45 மணிக்கு பாபநாசம் படித்துறையில் துவங்கும் நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் புரோஹித் பங்கேற்று, புஷ்கர விழாவை துவக்கி வைக்கிறார். இதில், இந்து அமைப்பினர், மடாதிபதிகள், பக்தர்கள், வடமாநிலங்களை சேர்ந்த மதகுருக்கள், சாமியார்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். கும்பகோணம் மகாமகம், காவிரியில் புஷ்கரவிழா நடக்கும் போது, அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசு, தாமிரபரணி மகாபுஷ்கர விழாவை, கடைசி வரை, அரசு விழாவாக அறிவிக்கவில்லை. இதனால், பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.