பதிவு செய்த நாள்
10
அக்
2018
11:10
நவராத்திரி பண்டிகையின் நோக்கமே, ’நாம் எல்லோரும் ஒன்றே, உலகில் உள்ள புல், பூண்டு முதல் மலை, கடல், உயிர்கள் வரை அனைத்தும் இறைசக்தியின் வடிவமே’ என்று உணர்த்துவது தான். துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறை சக்திகளும் ஒன்று சேர்ந்து, மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே, நவராத்திரி என்கிறோம். அதாவது, நம் மனதில் தோன்றும் கெட்ட எண்ணங்கள், காமம், கோபம், குரோதம், பழிகள் போன்ற அரக்கனை அழித்து, நல்லவற்றை விதைப்பதையே நவராத்திரியின் வழிபாடாக பின்பற்றி வருகிறோம்.
ஐம்பூதங்களில் ஒன்றான, மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை, சக்தியின் அம்சங்களாக எண்ணி, நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு, சகல நலங்களையும் தருவேன் என, அம்பிகையே அருள்பாலிக்கிறாள். இரண்டாம் நாளான இன்று, மகிஷனை வதம் செய்ய புறப்படும் வராஹி வடிவத்தில், ராஜராஜேஸ்வரி தோற்றமளிப்பாள். வராஹி நந்த நாதருக்கு, வராஹி ரூபத்தில் தோற்றமளித்ததால், இந்தப்பெயர் ஏற்பட்டது. ஈசனின் பாதியாக இருப்பதால், பக்தர்களின் இடர்களை களைந்து காப்பாற்றுபவளாக இருக்கிறாள். சகல வளங்களையும் கொடுப்பவள் என, நம்பப்படுகிறது. அதனாலேயே, சூலமும், உலக்கையும் இவளின் ஆயுதங்களாய் உள்ளன. புதன்கிழமையான இன்று, அம்மனை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. பிற நாட்களை விட இந்த நாளில் வழிபடுவது, பலமடங்கு பலன்களை தரும்.
அம்மனை முல்லை மலரால் அலங்கரித்து, துளசி இலையினால் அர்ச்சனை செய்ய வேண்டும். வாசமிக்க மருவு இலையையும் இணைத்துக் கொள்வது நல்லது.கோதுமை மாவினால், கட்டம் கோலம் போட வேண்டும். நிவேதனத்துக்கு, மாம்பழம் வைப்பது நல்லது. காலை, புளி சாதம் படைக்கலாம்; மாலை, தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் செய்து, பிரசாதமாய் கொடுக்கலாம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும், நவ தானியங்களால் சுண்டல் செய்து கொடுத்து, நாமும் சாப்பிடுவது, அந்த பருவ காலத்தில், சீதோஷ்ண மாற்றத்தால் வரும் தோல் பிரச்னைகளை சரிசெய்வதற்கும் ஏற்றது என்பதை, ஆன்மிகத்தோடு, அறிவியலாகவும் தெரிந்து கொள்வோம். நம் சொந்த குழந்தையாக இல்லாமல், பிறர் வீட்டு குழந்தைகளை வரவழைத்து அலங்கரித்து, திருமூர்த்தியாக பாவிக்கலாம்.
அம்மனை, மயில் வாகனம் மற்றும் சேவல் கொடியோடு அலங்கரிக்க வேண்டும். இந்த வடிவத்தில் அம்பாள், குமார கண நாதம்பா என, அழைக்கப்படுகிறாள். புல்லாங்குழலில் கல்யாணி ராகத்தில், இந்த பாடலை இசைப்பது, மிகவும் சிறப்பானது. கொலு வைத்து வழிபட்டு, அதனை காண வரும் குழந்தைகள், அக்கம் பக்கத்து நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுப்பது வழக்கம். அம்பிகையின் அம்சமாகவே கருதப்படும் வெற்றிலையுடன், பாக்கும் வைத்து கொடுக்கப்பட வேண்டும். இத்துடன் மஞ்சள், குங்குமம், சீப்பு, புடவை, ரவிக்கைத் துணி, மருதாணி உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொடுக்கலாம். நாம் கொடுக்கும் பொருட்கள், வாங்கியவர்கள் பயன்படுத்தும் வகையில், நல்ல விதமாய் இருக்க வேண்டும். அழுகல் வெற்றிலையோ, காலாவதியான பாக்கு, மங்கிய சேலை, ரவிக்கை துணி என்றோ இல்லாமல் பார்த்துக் கொள்வதும், ஒரு வழிமுறையே. ஒவ்வொரு நாளும், நாம் அலங்கரிக்கும் தேவியர், கம்பீரமாய் உட்கார்ந்து இருக்கும் வாகனங்களிலும், கவனம் செலுத்த வேண்டும்.
தேவியரின் வாகனம்:
இந்திராணி - யானை
வைஷ்ணவி - கருடன்
மகேஸ்வரி - ரிஷபம்
கவுமாரி மயில் -வராகி எருமை
அபிராமி - அன்னம்.
மதுரை மீனாட்சியம்மன் நாளை மேருமலையை செண்டால் அடித்தல் கோலத்தில் காட்சி தருகிறாள். முருகனின் அம்சமான மன்னர் உக்கிரகுமாரர் மதுரையை ஆண்ட காலத்தில் பஞ்சம் நிலவியது. வருந்திய மன்னர் சிவனை வழிபட்டு நித்திரையில் ஆழ்ந்தார். கனவில் வந்த சிவன்,‘‘ வருந்தாதே! மலைகளுக்கு அரசனான மேருவிடம் செல். ஆணவம் மிக்க அவனைச் செண்டால் அடித்து பணியச் செய். அங்குள்ள சேமநிதியிலுள்ள பொன்னை எடுத்து வந்து மக்களைக் காப்பாற்று’’ எனக் கட்டளையிட்டார். மன்னரும் சிவனை வழிபட்டு தேர் மீதேறி புறப்பட்டார். ‘‘மலைகளில் சிறந்த மேருமலையே...’’ என பலமுறை கூப்பிட்டும் அது வெளிப்படவில்லை. இறுதியில் செண்டாயுதத்தால் தலையில் ஓங்கியடிக்கவே பணிந்தது. ‘‘ மக்களைக் காக்க பொன்னும், பொருளும் வேண்டும். அதற்கான சேமநிதி எங்கிருக்கிறது?’’ எனக் கேட்டார் மன்னர். அருகில் இருந்த குகையை காட்டவே தேவையான பொன்னை எடுத்து வந்து மக்களுக்கு வழங்கினார். இக்கோலத்தை தரிசித்தால் செல்வம் பெருகும்.
நைவேத்யம்: தயிர்வடை, வேர்க்கடலை, சுண்டல், எள்சாதம், புளியோதரை
பாட வேண்டிய பாடல்:
கருத்தன எந்தை தன் கண்ணன வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே என் வந்தென் முன்நிற்கவே.