பதிவு செய்த நாள்
11
அக்
2018
10:10
நெல்லை: தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் தாமிரபரணி மகாபுஷ்கரவிழா துவங்கியது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாபுஷ்கரவிழா இன்று முதல் துவங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவை கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை அரசு சார்பில் செய்யாத நிலையில் இந்து அமைப்புகள் செய்து வருகின்றனர்.
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து, இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாகும் போது, அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. இன்று முதல், விருச்சிக ராசியில் பிரவேசிக்கிறார். இதையொட்டி, விருச்சிக ராசிக்கான புண்ணிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.
144 ஆண்டுகளுக்கு பிறகு மகாபுஷ்கரமாக கொண்டாடப்படுகிறது.இதற்காக, தாமிரபரணி நதி உற்பத்தியாகும் பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, திருவேங்கடநாதபுரம், திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில், தைப்பூச மண்டபம் என, பல்வேறு படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் புனித நீராட ஏற்பாடுகள் நடக்கின்றன. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பாபநாசம் கோவில் அருகே, சேனைத்தலைவர் மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், காலை, 10:30 மணிக்கு பங்கேற்கிறார். இரவு, 7:15 மணிக்கு திருப்புடைமருதுார் தாமிரபரணி ஆற்றில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். நாளை, காலையில் துாத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் நடக்கும் புஷ்கர விழாவில் பங்கேற்கிறார்.தாமிரபரணி புஷ்கர விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பகதர்கள் வரத் துவங்கிஉள்ளனர். சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.நெல்லை ஜங்ஷன் பகுதியில் தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை ஆகியவற்றில் அதிக பக்தர்கள் நீராட வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.காஞ்சி சங்கரமடம், சிருங்கேரி மடங்கள், அகில பாரத துறவியர்கள் சங்கத்தினர் சார்பில் துாய்மைப்பணிகள், தற்காலிக தடுப்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.