பதிவு செய்த நாள்
11
அக்
2018
11:10
சபரிமலை : சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பா.ஜ., கூட்டணி சார்பில் பிரமாண்ட பேரணி புறப்பட்டது. சபரிமலையில் பெண்களுக்கான தனி வசதி எதுவும் செய்யப்படவில்லை என தேவசம் போர்டும் அறிவித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அமல்படுத்தும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ., கூட்டணி சார்பில் மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை தலைமையில் நேற்று பந்தளத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. இதில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அக்.15-ம் தேதி இந்த பேரணி கேரள தலைநகர் திருவனந்தபுரம் வந்தடைகிறது. அங்கு சபரிமலையை காக்க கோரி போராட்டம் நடக்கிறது. தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. பந்தளத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் செயல் தலைவர் சுதாகரன், சபரிமலையில் பெண் போலீசை நியமிக்க கேரள அரசு முயற்சிக்கிறது, பக்தர்கள் நினைத்தால் ஒரு போலீஸ் கூட சபரிமலை செல்ல முடியாத நிலை ஏற்படும், சபரிமலையை ஒரு சுற்றுலா மையமாக மாற்ற அனுமதிக்க முடியாது, பெண்களுக்கு சம உரிமை என்று கூறி இந்த தீர்ப்பை பினராயி அரசு கேட்டு பெற்றது, என் கூறினார். இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், சபரிமலையில் பெண்களுக்காக எந்த சிறப்பு வசதியும் செய்யப்போவதில்லை. பெண் போலீஸ் நியமிப்பது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை, என்றார்.
தமிழகத்திலும் ஆதரவு : நேற்று மதுரையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் நடந்தது. தேனியில் ஐயப்பா சேவா சமாஜம் மாநில பொறுப்பாளர் கணேசன் தலைமையில் ஊர்வலம் நடந்தது. தேவதானப்பட்டியில் அகிலபாரத ஐயப்பசேவா சங்க தலைவர் முத்துக்காமாட்சி தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. திண்டுக்கல்லில் சபரியை காப்போம் என வலியுறுத்தி ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் ஊர்வலம் நடந்தது.