பதிவு செய்த நாள்
11
அக்
2018
01:10
மைசூரு: கர்நாடக மாநிலம், மைசூரில், பாரம்பரியம் மிக்க தசரா விழா, நேற்று துவங்கியது.கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்., ஆட்சி நடக்கிறது.நாடு முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, கர்நாடக மாநிலம், மைசூரில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.கடந்த, 1610 முதல், ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக பாரம்பரியத்தை நிலை நாட்டும் வகையில், தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பின், மாநில வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களில் ஒருவரை வைத்து, மாநில அரசு, விழாவை துவக்கி வைத்து வருகிறது.இந்தாண்டுக்கான தசரா விழாவை, இன்போசீஸ் அறக்கட்டளை நிறுவனர் சுதாமூர்த்தி, நேற்று காலை துவக்கி வைத்தார்.தசரா விழாவையொட்டி, மைசூரு நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திரைப்பட விழா, விளையாட்டு தசரா, மலர் கண்காட்சி, மல்யுத்தம் என, பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.