பதிவு செய்த நாள்
11
அக்
2018
01:10
மதுரை: திருநெல்வேலியில் அக்.,13 நடக்கும் தாமிரபரணி மகா புஷ்கர விழாவிற்காக விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 12 ரதங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டன.ரதங்களில் இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய தீர்த்த கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.துவக்கி வைத்து பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா பேசியதாவது: பசுவின் பாலை பயன்படுத்துவது போல் இயற்கை வளங்களை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழா நடக்கிறது. சுற்றுச்சூழலுடன் ஒன்றிணைவது தான் வாழ்க்கை என வேதங்கள் கூறுகின்றன. தாமிரபரணி புஷ்கரம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. 12 புஷ்கரங்களுக்கு பிறகு மகா புஷ்கரம் நடக்கும். இப்புனித வழிபாட்டை எதிர்ப்பது ஏற்புடையதில்லை, என்றார்.புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, பா.ஜ., நிர்வாகிகள் சசிராமன், மகாசுசீந்திரன், சிவபிரபாகரன், ஐயப்ப குருசாமிகள் சுப்பிரமணியன், ஹரிஹரன், பத்மநாபன், இந்து முன்னணி சுடலைமணி பங்கேற்றனர்.