பதிவு செய்த நாள்
12
அக்
2018
11:10
திருநெல்வேலி : நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில், 144 ஆண்டுகளுக்கு பின், தாமிர பரணி மகா புஷ்கர விழா நேற்று கோலாகலமாக துவங்கியது. பாபநாசம் படித்துறையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் புனித நீராடினார்.
குருபகவான் ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு குருபகவான், விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். விருச்சிக ராசிக்குரிய தாமிரபரணி நதியில், புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த நதி, நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் உற்பத்தியாகி, 130 கி.மீ., பயணித்து, துாத்துக்குடி மாவட்டம், புன்னகாயலில் கடலில் கலக்கிறது.
தாமிரபரணியில், 1874ல் நடத்தப்பட்ட புஷ்கர விழா, 144 ஆண்டுகளுக்கு பின், நேற்று துவங்கியது. விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த கங்கை, நர்மதை, கோதாவரி உள்ளிட்ட, 12 நதி கூடிய ரதங்கள், நேற்று முன்தினம் இரவு பாபநாசம் வந்தன. நேற்று அதிகாலை, தீர்த்த கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தாமிரபரணி அன்னை சிலை, பாபநாசம் படித்துறைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 12 நதி தீர்த்தங்கள், பாபநாசத்தில், ஆற்றில் கலக்கப்பட்டன. அகில இந்திய துறவியர் சங்க அகிலானந்த சுவாமிகள் கொடியேற்றி, அகண்ட தீபத்தை ஏற்றினார். நாடு முழுவதும் இருந்து, பல்வேறு மடங்களில் இருந்து வந்திருந்த ஆதீனங்கள், ஜீயர்கள், சாதுக்கள், துறவியர் நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நீராடினர்.
கவர்னர், பன்வாரிலால் புரோஹித், நேற்று காலை, தென்காசி வந்தார். பாபநாசம் கோவில் அருகே, காலை, 11:40 மணிக்கு அவர் புனித நீராடினார். தொடர்ந்து துறவியர்கள் மாநாட்டில், விழா மலரை வெளியிட்டார். விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன், அகில இந்திய துறவியர் சங்க செயலர், ராமானந்தா சுவாமி கள், ராம்கோ தலைவர் வெங்கட்ராமராஜா, சிங்கம்பட்டி முன்னாள் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கவர்னர் பேசுகையில், இந்த விழாவில் பங்கேற்பது, வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு. நதி சுத்தமாகவும், துாய்மையாகவும், பசுமையாகவும் உள்ளது, என்றார். தொடர்ந்து, திருநெல்வேலி அடுத்துள்ள அருகன்குளம் அருகே, ஜடாயு தீர்த்தத்தில் வைணவ மடங்கள் ஏற்பாடு செய்திருந்த புஷ்கர விழா, இரவு, 7:30 மணிக்கு திருப்புடைமருதுாரில், காஞ்சி சங்கரமடம் நடத்திய தாமிரபரணி ஆரத்தி விழாக்களிலும், கவர்னர் பங்கேற்றார்.
அரசு மீது புகார் : மத்திய அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், புஷ்கர விழாவிற்கு, படித்துறைகளை அரசு சரிசெய்யவில்லை. பாதுகாப்பு, கழிப்பறை, குடிநீர் வசதிகளை செய்யவில்லை. அறநிலையத் துறைக்கு மக்கள் கோடிக்கணக்கில் பணம் செலுத்துகின்றனர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதற்கான வசதிகளை செய்ய வேண்டும், என்றார். துாத்துக்குடி மாவட்டத்தில், குரு ஸ்தலமாக போற்றப்படும் முறப்பநாட்டிலும், நேற்று புஷ்கர விழா துவங்கியது. வரும், 23ம் தேதி வரை, 12 நாட்கள் விழா நடக்கிறது. பாபநாசம் - புன்னகாயல் வரை உள்ள, 64 தீர்த்த கட்டங்கள் உள்ளிட்ட, 144 முக்கிய படித்துறைகளில் பக்தர்கள் நீராடவும், வழிபாடு செய்யவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முக்கிய படித்துறைகளில், தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
புண்ணியம் தேடலாம்...: புஷ்கர விழா நடக்கும், 12 நாட்களும், 12 ராசிக்காரர்களும் தாமிரபரணியில் புனித நீராடி பயன்பெறலாம். இதன் விபரம் வருமாறு:12ம் தேதி - விருச்சிகம்; 13 - தனுசு; 14 - மகரம்; 15 - கும்பம்; 16 - மீனம்; 17 - மேஷம்; 18 - ரிஷபம்; 19 - மிதுனம்; 20 - கடகம்; 21 - சிம்மம்; 22 - கன்னி; 23 - துலாம். இருப்பினும், 12 நாட்களிலும், அனைவரும் நீராடி புண்ணியம் தேடலாம்.
தினமும் பூஜை...: புஷ்கர விழாவில், 12 நாட்களும், தினமும் காலை, 10:00 மணிக்கு விநாயகர் ஜெபவேள்வி யுடன் துவங்கி, பல்வேறு பூஜைகள் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, அரசு சார்பில் செய்யாத நிலையில், பல்வேறு ஹிந்து அமைப்புகள் செய்துள்ளன.
கவர்னர் பயண திட்டம் : இன்று, 12ம் தேதி காலை, 6:00 மணிக்கு துாத்துக்குடி செல்லும் வழியில், குரு ஸ்தலமாக போற்றப்படும், முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் நடக்கும் புஷ்கர விழாவில், கவர்னர் பங்கேற்கிறார். பின், துாத்துக்குடி விருந்தினர் மாளிகை செல்லும் அவர், அங்கு பொதுமக்களை சந்தித்து மனுக்கள் வாங்குகிறார். மாலை, 4:40 மணிக்கு, விமானத்தில் சென்னை செல்கிறார்.
எங்கெங்கு குளிக்கலாம் : தாமிரபரணி மகா புஷ்கர விழாவில், 143 படித்துறைகளில் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டாலும், நெல்லை, துாத்துக்குடியில் எங்கெங்கு குளிப்பது விசேஷமானது என, பக்தர்கள் தரப்பில் கூறப்படும் இடங்கள் வருமாறு: நெல்லை மாவட்டம் : பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதுார், முக்கூடல், கோடகநல்லுார், கரிசூழ்ந்த மங்கலம், திருவேங்கடநாதபுரம், குறுக்குதுறை, சீவலப்பேரி ஆறுகளில் உள்ள படித்துறைகள். சேரன்மகாதேவி வியாசர், அத்தாளநல்லுார் கஜேந்திர மோட்சம், அருகன்குளம் ஜடாயு ஆகிய தீர்த்த கட்டங்களில் குளிப்பது சிறப்பானது. துாத்துக்குடி : நவ கயிலாயங்களில் குருஸ்தலமாக விளங்கும் முறப்பநாடு சிவன்கோவில் முன் ஓடும் தாமிரபரணி ஆறு, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சேர்ந்தபூமங்கலம், புன்னக்காயல் ஆகிய படித்துறைகள்.