பதிவு செய்த நாள்
12
அக்
2018
12:10
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் உடை மாற்றும் அறை (கன்டெய்னர்) பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து, முன்னோர்ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி, தர்ப்பணம் பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் நீராடி கோயிலுக்குள் செல்கின்றனர். கடற்கரையில் பூஜை செய்து நீராடியதும் பக்தர்கள் உடைகளை கடலில் வீசுவதால், கடல்நீர் மாசுப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. ஆண், பெண் பக்தர்கள் ஈரத்துணியை மாற்ற அறையின்றி அவதிப்பட்டனர். இதனை தவிர்க்க கடற்கரையில் 4 இரும்பு கன்டெய்னர்கள் வைக்கப்பட்டது. இதில் ஆண், பெண் பக்தர்கள் தனித்தனியாக உடை மாற்றி கொள்ளலாம். ஆனால் கன்டெய்னர் வைத்து 20 நாட்கள் ஆகியும், பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி கூறுகையில்: பக்தர்கள் வசதிக்காக கன்டெய்னருக்குள் மின்பல்பு, மின்விசிறி வசதி உள்ளதால், மின்சார இணைப்புக்கு மனு கொடுத்துள்ளோம். மின் இணைப்பு கிடைத்ததும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,என்றார்.