பதிவு செய்த நாள்
14
அக்
2018
12:10
கோவை:சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிப்பதை எதிர்த்து, கோவையில் அய்யப்ப பக்தர்களின் சரண கோஷ யாத்திரை நடந்தது. கோயமுத்துார் அய்யப்பா சேவா சங்கம் சார்பில் சரண கோஷம் யாத்திரை நேற்று நடந்தது. இதன் முடிவில், மத்திய கயிறு வாரியத் தலைவர், சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இறைவனை எப்படி வழிபட வேண்டும் என, யாரும் சொல்லித்தர தேவையில்லை. நம் ஹிந்து மத தர்மம், நம் முன்னோரில் இருந்து, தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த கலி காலத்தில் முற்போக்கு சிந்தனை என்ற பெயரில், இதை அழித்து விடமுடியாது; பாரம்பரிய கலாசாரத்தையும், ஆன்மிக நடைமுறைகளையும் மாற்ற முடியாது.தாயை, இறைவனுக்கு நிகராக மதிக்கக்கூடியது இந்து மதம். தாய்களால் தான் ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது. அவர்களால் தான், இந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார். பெண்கள் சார்பில், சேவா சங்கத்தின் சுஜாதா கூறியதாவது:சபரிமலைக்கு, 50 வயது வரை காத்திருந்து செல்ல தயாராக உள்ளோம். பம்பா நதியின் புனிதத்தை அசுத்தப்படுத்த விரும்ப வில்லை. சபரிமலையின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதே போல, திருச்சியிலும், அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில், நேற்று பேரணி நடந்தது.