பதிவு செய்த நாள்
15
அக்
2018
10:10
திருநெல்வேலி: நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழாவில், நேற்று விடுமுறை நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.குருபெயர்ச்சியையொட்டி, தாமிரபரணி நதியில், அக்., 11 முதல், மகாபுஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. வரும், 23ம் தேதி வரையிலும் நடக்கிறது.நேற்று விடுமுறை நாள் என்பதால், அனைத்து படித்துறைகளிலும், தீர்த்தக் கட்டங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பாபநாசம் சிவன் கோவில் படித்துறையில், நேற்று நீராட கூட்டம் அலைமோதியது.
கார், வேன்கள், 3 கி.மீ.,க்கு முன், விக்கிரசிங்கபுரம், அகஸ்தியர்பட்டி மருத்துவமனை அருகே திடலில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அரசு பஸ்களில் சென்றனர்.நெல்லை மாவட்டம், மேலச்செவலில் வசிக்கும் முஸ்லிம்கள், மேலச்செவல் தாமிரபரணி நதியில் காலையில் நீராடினர். பின்னர் தொழுகை செய்தனர்.இதே போல, மாலையில், மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், நதியில் நீராடினர்.தாமிரபரணி புஷ்கரத்தையொட்டி நெல்லை, ஜங்ஷன் தைப்பூச மண்டபம், எட்டெழுத்து பெருமாள் ஜடாயுதீர்த்தம் ஆகியவற்றில், தினமும் இரவு, 7:00 மணிக்கு தீபாராதனை, ஆரத்தி நடக்கிறது.