பதிவு செய்த நாள்
16
அக்
2018
11:10
சபரிமலை: சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திருவனந்தபுரத்தில் அரசின் தலைமை செயலகத்தை பக்தர்கள் முற்றுகையிட்டனர். எதிர்ப்பு வலுப்பதால் பந்தள மன்னர் குடும்பம், ஐயப்ப சேவா சங்கத்துடன் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இன்று சமரச பேச்சு நடத்துகிறது.உச்சநீதிமன்ற உத்தரவை ஆளும் இடது முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பந்தளத்தில் இருந்து அக்.,10-ல் புறப்பட்ட பக்தர்கள் நேற்று திருவனந்தபுரம் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர்.இதில் பா.ஜ., தேசிய செயலர் முரளிதரராவ் பேசுகையில், பிரச்னை களுக்கு காரணம் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு. இந்த போராட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது அல்ல. ஆகமத்தை காக்க வேண்டும் என பக்தர்கள் போராடுகின்றனர்.
இடது முன்னணி அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். எத்தனையோ தீர்ப்புகளை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி, இதில் மவுனம் சாதிப்பது ஏன், என்றார். மாநில பா.ஜ., தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை பேசுகையில், சபரிமலையை தகர்க்க மார்க்சிஸ்ட் கட்சி நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தது. இப்போது தீர்ப்பை பயன்படுத்தி அதை செயல்படுத்துகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் பிரச்னைக்கு தீர்வு காணாத பட்சத்தில் , அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும், என்றார்.சமரச கூட்டம்இந்நிலையில் சபரிமலை மண்டல, மகர விளக்கு கால ஏற்பாடுகள் என்ற பெயரில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதில் பந்தளம் மன்னர் குடும்பம், தந்திரி சமாஜம், ஐயப்பா சேவா சங்கம், யோகஷேச சபை ஆகிய அமைப்பு களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வேறு பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் பெண்களுக்கு அனுமதி குறித்த பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. சமரச பேச்சில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்திருந்த பந்தளம் மன்னர் குடும்ப பிரதி நிதிகள், இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.