நவராத்திரி பூஜை நெருங்கும் நேரத்தில் சங்கரமடத்திற்கு வந்தார் பக்தர் ஒருவர். “சுவாமி... பணக்கஷ்டத்தில் சிக்கித் தவிக்கிறேன். வரும் நவராத்திரியின் போது எந்த சுலோகத்தை நான் பாராயணம் செய்யலாம்?” எனக் கேட்டார். “நமக்கு கல்வி, செல்வம், ஆரோக்கியம் எல்லாம் தேவைப்படுகிறது. பணம் இருந்தால் தான் கல்வி பெற முடியும். உடல் நலம் பெற மருத்துவச் செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது. ’பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்கிறாரே திருவள்ளுவர்? அதற்காக அதர்ம வழியில் யாரும் பணம் சம்பாதிக்க கூடாது. தர்ம வழிகளில் தான் சம்பாதிக்க வேண்டும்!சூ என்றார் சுவாமிகள். சற்று மவுனம் காத்த சுவாமிகள் மீண்டும் பேச தொடங்கினார். ’பவதி பிட்சாந்தேஹி’ என்று பிட்சைக்காக வாசலில் சங்கரர் நிற்பதைக் கண்ட ஏழைப் பெண் மனம் உருகிப் போனாள். கொடுக்க உணவு இல்லாத நிலையில், தயக்கமுடன் வாடிய நெல்லிக்கனியை ஒன்றை எடுத்து வந்தாள். சங்கரரின் பிட்சா பாத்திரத்தில் வைத்து விட்டு கண்ணீர் மல்க நின்றாள். வீட்டில் இருக்கும் ஒரே ஒரு நெல்லிக்கனியையும் தானம் அளித்த அவளது கருணை, சங்கரரின் மனதை அசைத்து விட்டது.
அவள் நலம் பெற லட்சுமிதேவி மீது கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். ’முன்வினைப் பயனால் அவள் ஏழ்மையில் வாடுகிறாள். பாவம் தொலையும் காலம் வரும் வரை இந்நிலை மாறாது’ என வானில் அசரீரி ஒலித்தது.’இவளுக்கு என்னிடம் ஏற்பட்ட இரக்கம், லட்சுமிதேவியான உனக்கு இவளிடம் ஏற்படக் கூடாதா? கருணை எனும் காற்றால் அவளது முன்வினையை ஊதித் தள்ளி விட்டு செல்வ மழையைப் பொழியச் செய்வாய் அம்மா’ என சங்கரர் மகாலட்சுமியிடம் வேண்டினார். அந்த வீட்டில் தங்க நெல்லிக்கனி மழையாகப் பொழிந்தது. சங்கரர் பாடிய கனகதார ஸ்தோத்திரத்திற்கு மகிமை அதிகம். ஏனெனில் இதுவே ஆச்சார்யாள் ஆதிசங்கரர் அருளிய முதல் பாடல். ’கனகதாரா’ என்றால் பொன்மழை. இதை நவராத்திரி பூஜையில் பாடினால் மகாலட்சுமி மனம் குளிர்ந்து செல்வம் அருள்வாள்.” என்றார். திருப்பூர் கிருஷ்ணன்