விதவைத் தாய் ஒருத்தி, தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தாள். மனைவி வீட்டுக்கு வந்த கொஞ்ச நாளிலேயே அவன் நடவடிக்கைகள் மாற ஆரம்பித்தன. தாய் மேல் இருந்த அக்கறையும், அன்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. மகன் மதிக்காத தாயை மருமகள் மட்டும் மதித்து விடுவாளா என்ன? அவள் பங்கிற்கு அவளும் அலட்சியப்படுத்தினாள்.
ஆனால், அவர்கள் மீதிருந்த அன்பையும், மதிப்பையும் எந்த சூழலிலும் தாய் மாற்றிக்கொள்ளவில்லை.
நாட்கள் சென்றன. மாமியாரை சுத்தமாகப் பிடிக்காமல் போனது மருமகளுக்கு. அவளின் அத்தனை துன்புறுத்தல்களையும் பொறுமையாக தாய் ஏற்றுக்கொள்வது தான் அவளுக்கு வெறுப்பைக் கொடுத்தது. தாய்க்கு வலிக்கிற மாதிரி ஏதாவது செய்ய வேண்டுமே என்று திட்டம் போட்டது அவளின் மூளை. ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் அவளது தாய் வீட்டுக்கு கிளம்பிப் போய் விட்டாள். மகன் வீட்டுக்குள் நுழைந்து மனைவி இல்லாதது கண்டு தாயை அடித்து விட்டு வெளியேறினான்.
“தயவு செய்து என்னோடு வீட்டுக்கு வா” என்று மனைவியைப் பார்த்து கெஞ்சினான்.
“உங்க அம்மாவை எனக்குப் பிடிக்கவேயில்லை. அவர்கள் இருந்தால் என்னால் அங்கு நிம்மதியாக வாழ முடியாது” என்றாள்.
“சரி இப்போது என்னை, என்ன தான் செய்யச் சொல்கிறாய்?”
“வேறு வழியில்லை. உங்க அம்மாவைக் கொன்று விடு” அவன் அதிர்ந்தான்.
“என்னடி சொல்கிறாய்?”
“ஆம். அப்போது தான் நாம் சுதந்திரமாக வாழ முடியும்”
சிறிது நேரம் அமைதியாக எதையோ யோசித்தவன். சரியென்று தலையசைத்தான்.
“உன் அம்மாவின் இதயத்தோடு வந்தால் வா. இல்லையென்றால் என்னை மறந்து விடு” என்று சொல்லியனுப்பினாள்.
தூக்கத்தில் இருந்த தாயை கொன்று இதயத்தை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி வந்தான். படாரென ஒரு கல் தடுக்கி கீழே விழுந்தான்.
“பாத்துப்பா பாத்து. உனக்கெதும் அடி படவில்லையே...?” என்று கேட்டது மண்ணில் கிடந்த தாயின் இதயம்.
அவனுக்கு செவிட்டில் அறைந்தது போலிருந்தது. மனைவி பேச்சைக் கேட்டு பெரும் பாவம் செய்து விட்டேனே என்று கதறிப் பிதற்ற ஆரம்பித்தான். புத்தி பேதலித்து, பைத்தியமாக சாலையில் திரிய ஆரம்பித்தான். அவன் மனைவியோ இன்னொரு திருமணம் செய்து, மிக மிக மோசமான ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டாள்.
அங்கு எல்லோராலும் அணுஅணுவாய் சித்ரவதை செய்யப்பட்டாள். பின் தற்கொலை செய்து கொண்டு நரகம் போனாள்.
உலகில் எதை இழந்தாலும் மீண்டும் பெற்று விடலாம். ஆனால் தாயை...?!
“உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவிகொடு; தாயின் வயதான காலத்தில் அவளை அசட்டை பண்ணாதே”