நிலக்கல் : சபரிமலையில் நிலக்கல் பகுதியில் போராட்டம் நடத்திய ஐயப்ப பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தடியடி நடத்திய போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதை தடுக்க இந்து அமைப்புகள் தீவிரமாக உள்ளதால், சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல தடையில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த பிறகு, சபரிமலை கோவில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு பிறகு 22ம் தேதி நடை அடைக்கப்படும். கோவிலுக்கு பெண்கள் வருவதை தடுக்க நிலக்கல் பகுதியில் இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் குவிந்துள்ளனர். நிலக்கல் மற்றும் பம்பையில், 800 ஆண் போலீசாரும், 200 பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலக்கல்லில் போலீசார் தடியடி நடத்தி 4 பேரை கைது செய்தனர். சபரிமலை சன்னிதானம் பகுதியில், 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.