பதிவு செய்த நாள்
17
அக்
2018
10:10
சோழவந்தான்: குருபகவான் தலமான மதுரை மாவட்டம் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் கொள்ளை போன நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன.
இதுகுறித்து தென்மண்டல ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் கூறியதாவது: கடந்த அக்.,13 இரவு பெருமாள், சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் முகமூடி அணிந்த இருவரால் கொள்ளையடிக்கப்பட்டன. எஸ்.பி., மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் கல்யாணபட்டி பிரிவு அருகே கொள்ளை போன சிலைகள் கிடப்பது குறித்து கணேசன் என்பவர் தகவல் தெரிவித்தார். விளாம்பட்டி போலீசார் சிலைகளை மீட்டு சோழவந்தான் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெருமாள், சீனிவாசபெருமாள் சிலைகளின் ததாயுதம் பகுதி சில இன்ச் அளவுக்கு வெட்டி எடுக்கப்பட்டு, தங்கம் எத்தனை சதவீதம் உள்ளது என சோதித்துள்ளனர். தங்கத்தின் அளவு குறைவாக இருந்ததாலும், போலீஸ் கண்காணிப்பு காரணமாகவும் சிலைகளை விட்டு சென்றிருக்கலாம். இக்கொள்ளையில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்கிறோம். கொள்ளையர் ஒரு வாரத்திற்குள் கைது செய்யப்படுவர், என்றார். சிலை கடத்தல்தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் உடனிருந்தனர்.