பதிவு செய்த நாள்
20
அக்
2018
10:10
தஞ்சாவூர், தஞ்சையில், ராஜராஜ சோழனின், 1,033ம் சதய விழா துவங்கியது. தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள், சதய விழாவாக, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தான் தஞ்சை பெரிய கோவில் (கி.பி 985ல்) கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்தாண்டு, 1,033ம் சதய விழா, நேற்று காலை, கோவில் வளாகத்தில், மங்கள இசை முழங்க துவங்கியது.திருமுறை அரங்கம், மாமன்னன் ராஜராஜன் கண்ட திருமுறை, ராஜராஜன் ஆட்சிக்காலம் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கமும், திருமுறை பன்னிசை, திருமுறை இசையரங்கம் போன்றவை நடந்தன.இன்று காலை, 7:30 மணிக்கு ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின், திருமுறை திருவீதியுலா நடக்கிறது. பின், பெருவுடையார் பெரியநாயகி திருமேனிக்கு, 48 வகையான பொருட்களால், அபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து, மாலையில், நாத இசை சங்கமம், திருமுறை பண்ணிசையரங்கம், வில்லுப்பாட்டு, பரதநாட்டியம் நடக்கிறது. மாமன்னன் ராஜராஜ சோழனின் பெரும் புகழுக்கு காரணம், அரசியல் மாட்சியே - அருங்கலை வளர்ச்சியே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.
அதிகாரிகள் ஆய்வு: தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கோயிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை குறித்து 3 வது கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.