பதிவு செய்த நாள்
20
அக்
2018
10:10
சபரிமலை: சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய, தனக்கு 50 வயது ஆன பிறகு மீண்டும் வர உள்ளதாக மதுரையைச் சேர்ந்த 9 வயது சிறுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்த சிறுமி, அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, கடந்த 3 நாட்களாக பெண்கள் சிலர் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்றனர். இருப்பினும் அவர்கள் அய்யப்ப பக்தர்களால் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சன்னிதானம் வரை சென்ற 2 பெண்களும் பக்தர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
சபரிமலையில் போராட்டம், பதற்றம், 144 தடை உள்ள நிலையில் நேற்று தனது தந்தையுடன் மதுரையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஜனனி சபரிமலைக்கு மாலை அணிந்து, இருமுடிகட்டி சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவர் தனது கையில் ஏந்தி வந்த பதாகையில், எனக்கு இப்போது 9 வயது ஆகிறது. மீண்டும் சபரிமலை சன்னிதானத்திற்கு எனக்கு 50 வயது ஆன பிறகே வருவேன். அது வரை அய்யப்பனை காண ஆவலுடன் காத்திருப்பேன் என குறிப்பிட்டிருந்தார். இது பலரின் கவனத்தை ஈர்த்ததுடன், பாராட்டையும் பெற்றுள்ளது.
இது குறித்து சிறுமியின் தந்தை சதீஷ்குமார் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னது என எங்களுக்கு தெரியாது. எனது மகளுக்கு 10 வயது நிறைவடைந்து விட்டால், அடுத்து அவளுக்கு 50 வயது ஆகும் வரை காத்திருந்து, பிறகே அய்யப்பனை காண அனுப்ப வேண்டும் என நினைக்கிறேன். நாங்கள் அய்யப்பனை நேசிக்கிறோம். 50 வயது நிறைவடைவதற்கு முன் என் மகள் சபரிமலை வருவதை நான் விரும்வில்லை என்றார்.