பதிவு செய்த நாள்
20
அக்
2018
12:10
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய ராஜராஜசோழனின் 1033வது ஆண்டு சதயவிழா வெகு சிறப்பாக நடந்தது.
தஞ்சை பெரியகோவிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தான் தஞ்சை பெரிய கோவில் (கி.பி 985ல்) முதன் முதலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்தாண்டு 1033-வது சதயவிழா (19ம் தேதி) காலை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், விழா மங்கள இசை முழங்க தொடங்கியது. பிறகு திருமுறை அரங்கம், மாமன்னன் ராஜராஜன் கண்ட திருமுறை, ராஜராஜன் ஆட்சிக்காலம், போன்ற தலைப்புகளில் கருத்தரங்கமும், திருமுறை பன்னிசை, திருமுறை இசையரங்கம் போன்றவை நடைபெற்றன.
2ம் நாளான (20ம்தேதி) காலை 7.30 மணிக்கு ராஜராஜசோழன் சிலைக்கு கலெக்டர் அண்ணாதுரை,போலீஸ் எஸ்.பி., செந்தில்குமார்,சதயவிழா குழு தலைவர் திருஞானம் ஆகியோர் மாலை அணிவித்தனர். முன்னதாக தஞ்சை பெருவுடையார் கோயிலில் பணிபுரியும் சிவாச்சாரியர்கள், ஒதுவார்கள், பணியாளர்களுக்கு முறைப்படி வேட்டி, வஸ்திரம், வெற்றிலை பாக்குடன் வழங்கப்பட்டது. திருமுறை வீதி உலாவை திருவாடுதுறை ஆதினம் தம்பிரான் சாமிகள் தொடங்கி வைத்தார். அதையடுத்து பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் நவகவ்யப் பொடி, திரவியப் பொடி, வாசனைப் பொடி, மஞ்சள் பொடி, பால், அரிசி மாவு பொடி, சந்தன பொடி, பச்சிலை பொடி ஆகியவை தலா 50 கிலோ கொண்ட பொடிகளாலும், ஒரு டின் தேன், ஒரு டின் நெய், ஒரு டின் பஞ்சாமிர்தம், 400 லிட்டர் பசும்பால், 40 டின் தயிர், 100 கிலோ பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் பேரபிஷேகம், 108 கலச அபிஷேகம் நடந்தது. அபிஷே கத்தை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து மாலையில், நாதஇசை சங்கமம், திருமுறை பண்ணிசையரங்கம், வில்லுப்பாட்டு, பரதநாட்டியம் நடக்கிறது. மாமன்னன் ராஜராஜசோழனின் பெரும் புகழுக்கு காரணம் அரசியல் மாட்சியே, அருங்கலை வளர்ச்சியே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.