அழகர்கோவில்: அழகர்கோவிலில் கள்ளழகருக்கு தைலக்காப்பு உற்ஸவம் நடந்தது. இதையொட்டி அக்., 19 இரவு நவநீத கிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபத நாத சேவை, 20 மாலை சீராப்தி நாதன் சேவை நடந்தன. முக்கிய நிகழ்வாக நேற்று காலை கள்ளழகர் அலங்கார பல்லக்கில் மேளதாளம் முழங்க பரிவார தெய்வங்களுடன் அழகர்மலை உச்சி சென்றார். அனுமன், கருடன் தீர்த்த எல்லை பகுதிகளில் பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. பின் பெருமாள் நுாபுரகங்கை சென்றார். பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மாதவி மண்டபத்தில் பெருமாளுக்கு தைலக்காப்பு சாத்தப்பட்டது. பின் நுாபுரகங்கை தீர்த்தத்தில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பின் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. ராஜாங்க திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின் மலையடிவார கோயிலுக்கு திரும்பினார். அன்னதானம் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் செய்தனர்.