பதிவு செய்த நாள்
22
அக்
2018
10:10
திருநெல்வேலி: தாமிரபரணி புஷ்கர விழாவில், விடுமுறை தினமான நேற்று, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.தாமிரபரணி மகாபுஷ்கர விழா, அக்., 11ல் துவங்கியது; நாளை நிறைவடைகிறது. நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணியின் எல்லா படித்துறைகளிலும், நேற்று ஏராளமான மக்கள் நீராடினர். பாபநாசம் செல்லும் வழியில், விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்பட்டியில், வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து, அரசு பஸ்கள் மற்றும் ஆட்டோக்களில் சென்றனர்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று காலை, 7:30 மணிக்கு, பாபநாசம், ராஜேஸ்வரி மண்டபம் அருகில், தாமிர பரணியில் நீராடினார்.தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை, நேற்று பிற்பகலில், குறுக்குத்துறை சுப்ரமணியசுவாமி கோவில் படித்துறையில் நீராடினார். அவர் கூறுகையில், தாமிரபரணி புஷ்கர விழாவில் சுவாமி நெல்லையப்பர், தைப்பூச மண்டபத்தில் நீராட ஆகமவிதிகளை காரணம் காட்டி, அறநிலையத் துறையினர் தடை விதித்துள்ளனர். எனவே, நாளையாவது நெல்லையப்பர் நீராட நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.
கோவிலில் நெல்லையப்பர் திருக்கல்யாணத்திற்காக கால்நாட்டு நடந்துள்ளதால், சுவாமி வெளியே செல்லக்கூடாது என கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. திருச்செந்துார் துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டணம், முத்தாரம்மன் கோவிலில், தசராவிழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் ஏராளமானோர், திருச்செந்துாரிலும் குழுமினர். இதனால், கடற்கரையில், சூரசம்ஹார தினத்தன்று கூடுவது போல கூட்டம் இருந்தது. அவர்கள், தாமிரபரணி புஷ்கர நீராடலிலும் பங்கேற்றனர். இதனால், துாத்துக்குடி மாவட்டத்திலும் திருச்செந்துார் சாலை ஓரமாக உள்ள தாமிரபரணி தீர்த்தக்கட்டங்களில், வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது.