பதிவு செய்த நாள்
22
அக்
2018
11:10
சபரிமலை:கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்துக்கு செல்ல முயன்ற, ஆந்திராவை சேர்ந்த இருவர் உட்பட, நான்கு பெண்கள், பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.இதைத் தொடர்ந்து, அய்யப்பன் கோவில் நடை, சமீபத்தில் திறக்கப்பட்டது. கர்நாடகா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, பல பெண்கள், வாகனங்களில் சபரிமலைக்கு வந்த போது, நிலக்கல்லில் அவர்கள் தடுத்து நிறுத்தப் பட்டனர். கேரளாவை சேர்ந்த, ரெஹானா பாத்திமாவும், ஆந்திராவை சேர்ந்த பெண் பத்திரிகை நிருபர் ஒருவரும், போலீஸ் பாதுகாப்புடன் சபரி மலைக்கு சென்றனர். இருப்பினும், பக்தர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து இருவரும் திரும்பினர். இந்நிலையில், நேற்று ஆந்திராவில் இருந்து வந்த ஒரு குடும்பத்தில், 40 வயது பெண்கள் இருவர் இருந்தனர்.அவர்களை, சபரிமலை அடிவாரத்தில் பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். கோவிலில், 10 - 50 வயது பெண்கள் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்ற வழக்கத்தைஅறியாது வந்து விட்டோம் என, அவர்கள் கூறினர். பின், நுாற்றாண்டு பழமையான வழக்கத்தை மீற விரும்பவில்லை என, அந்த பெண்கள் எழுதி கொடுத்தனர்.
காயமடைந்தார்: நேற்று, சபரிமலைக்கு வந்த, பாலம்மா என்ற பெண்ணை, பக்தர்களும், போராட்டக்காரர்களும் சூழ்ந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில், பாலம்மா காயம் அடைந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது துவிர, 10 - 50 வயதுக்குட்பட்ட மேலும் ஒரு பெண்ணும், சன்னிதானம் அருகே, பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார். இருப்பினும், 50 வயது தாண்டிய பல பெண்கள், சபரிமலைக்கு சென்றுதரிசனம் செய்தனர். இதற்கிடையே,சபரிமலை விவகாரம் குறித்து விவாதிக்க, சட்ட சபையை கூட்டும்படி, கேரள மாநில, பா.ஜ., தலைவர், பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை வலியுறுத்திஉள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்ற, ரெஹானா பாத்திமாவை, தங்கள் சமூகத்தில் இருந்து விலக்கி வைப்பதாக, கேரளா முஸ்லிம் ஜமாத் கவுன்சில் அறிவித்து உள்ளது. ஜமாத் கவுன்சில் தலைவர், பூங்குஞ்சு வெளியிட்ட பத்திரிகை செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: ரெஹானா பாத்திமாவின் செயல், லட்சக்கணக் கான ஹிந்து பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது. எனவே, அவரையும், அவரது குடும்பத்தினரையும், இஸ்லாமிய சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கும்படி, எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமாத்துக்கு, கேரளா முஸ்லிம் ஜமாத் கவுன்சில் உத்தர விட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.