பதிவு செய்த நாள்
22
அக்
2018
11:10
மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில் முன்னோர்கள் உருவாக்கிய கற்றளி கோவில்களும், கற்சிலைகளும் காலத்தை வென்று காட்சி தருகின்றன.அமராவதி ஆற்றின் கரையில் காரத்தொழுவு, கடத்துார், கணியூர், சோழமாதேவி உள்ளிட்ட பல ஊர்களில் சைவ, வைணவ கற்றளிகள் (கல்லில் கட்டிய கோவில்) உள்ளன. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கற்றளிகள் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாகவும், உறுதியாகவும் உள்ளன.விசாலாட்சி அம்மன் உடனமர் காசிவிசுவநாதர் கோவில் இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கோவிலுக்கு தனிச்சிறப்பு வேண்டும் என்பதற்காக, இதன் மூலவர் சிலை (லிங்கம்) மற்றும் அம்மன் சிலை, காசியில் உள்ள கல் தச்சர்கள் மூலம் செதுக்கி, உருவாக்கி வழிபாடு செய்து, அங்கிருந்து எடுத்து வந்து, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. காசியிலிருந்து லிங்கம் எடுத்து வரப்பட்டதால் காசிவிசுவநாதர் கோவில் என அழைக்கப்படுகிறது.சிலைகள் சொல்லும் சிறப்புஇங்கு, வேலைப்பாடுகள் அமைந்த வேட்டி, கைகால்களில் ஆபரணங்கள், முகச்சவரம் செய்யப்பட்டு சீராக வெட்டப்பட்ட தலைமுடி, தலையில் உருமால் எனப்படும் தலைப்பாகை, ஆரோக்கியமான உடல்கட்டு, வணக்கம் செலுத்துவதில் பாரம்பரியமான முறை, நெற்றியில் பொட்டு, வீரம் பேசும் முறுக்கு மீசை என கம்பீரமாக உள்ள ஆண்சிலை உள்ளது. முறையாக வாரிய தலைமுடி, அதிலுள்ள பூக்கள், நாகரீகமான, அலங்காரமான மேலாடை, எளிய முறையில் அணிந்துள்ள சேலை, அபிநயத்தோடு நிற்கும் பாங்கு, கைகளில் வளையல், கழுத்தில் நெக்லஸ் என கலை நயத்தோடு பெண்ணின் சிலையும், வளாகத்தில் உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், இந்த சிலைகள் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் பாரம்பரியத்தையும், வாழ்ந்த விதத்தையும், பக்தியையும் இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிக்கிறது என்றனர்.