பதிவு செய்த நாள்
23
அக்
2018
12:10
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் வருவதால், தனியார் மற்றும் அரசு விடுதியில், வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத் தில், பிரசித்தி பெற்ற கோவிலாக, திருப்போரூர் கந்தசுவாமி முருகன் கோவில் உள்ளது. மாநிலம் முழுவதிலும் இருந்து,
ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
கோவிலில், காலையில் நடக்கும் பிரார்த்தனைகளில் பங்கேற்க முடியாமல், வெளியூர் பக்தர்கள் அவதிப்பட்டனர். இவர்கள் வசதிக்காக, ஓ.எம்.ஆர்., சாலை, மாட வீதிகளில் தனியார் விடுதிகள் திறக்கப்பட்டு, 500 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இது தவிர, 10 தனியார் திருமண மண்டபங்களிலும், பக்தர்கள் தங்க தனி அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் ஓய்வு கூடம், தனியாக தங்கும் அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புதிதாக ஏற்படுத்தப்பட்ட தங்கும் அறைகள் குறித்து, பக்தர்கள் கூறியதாவது: காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப, நகர் பகுதியாக வளர்ந்துள்ள திருப்போரூரில், தங்கும் விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், மாட்டு வண்டிகளில் வந்து, இரவு தங்கி, மறுநாள் சுவாமியை தரிசிப்போம். பிரார்த்தனை தலமான இக்கோவிலில், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தனியார் மற்றும் அரசு மூலம், பக்தர்கள் தங்கும் அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ‘ஏசி’ இல்லாத அறைக்கு, 500 ரூபாயும், ‘ஏசி, டிவி, ஹீட்டர்’ வசதிஉடைய அறை, 1,100 ரூபாய்க்கும் கிடைக்கிறது. மேலும், 10 பேர் தங்கும் அறைகளும், 1,500க்கு கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: அறநிலையத் துறை மூலம், பக்தர்கள் தங்க பெரிய ஓய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டண தங்கும் அறைகளும் கட்டப்பட்டு உள்ளன. இதை விரைவில் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.