“இயேசு மீண்டும் வருவார் என்கிறீர்களே? எங்கே அவர்? இப்போது இங்கே நடக்கும் அநியாயங்கள் போதவில்லையா? இவற்றைக் கழுவ அவர் உடனே வரமாட்டாரா? ” என விதண்டாவாதம் பேசுபவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். வேதாகமமாகிய பைபிளை சரியாக வாசிக்காததால் வந்த விளைவு இது. “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாத படிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது,” என ஏசாயா 59:2 வசனத்தைப் படித்திருந்தால் இப்படி பேசத் தோன்றுமா? அக்கிரமம் நிறைந்த இந்த உலகிற்கு அவர் ஒருமுறை வந்தார். அப்போது, “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும், தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்,”என்று ஏசாயா 53:7 கூறுவதைப் போல, சிலுவையில் அறையப்பட்டு, நமக்காக உயிரும் விட்டார். மீண்டும் அவர் நிச்சயம் வருவார். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் பைபிள் சொல்கிறது. “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியும் உள்ளவராயிருக்கிறார்,” என்ற யோவான் 1:9 வசனத்தில் உள்ள உண்மையை உணர வேண்டும். மனப்பூர்வமாக ஜெபித்தால் அவர் மீண்டும் வருவார். காயப்பட்டு கிடக்கும் இந்த பூமியை தன் ரத்தத்தை ஊற்றி மீண்டும் கழுவுவார்.நாம் மீண்டும் ஒருமுறை பாவ விமோசனம் பெறுவோம்.