பதிவு செய்த நாள்
24
அக்
2018
11:10
திருவனந்தபுரம்:வன்முறையின் கூடாரமாக சபரிமலையை மாற்ற அனுமதிக்க முடியாது. சபரிமலை, திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு மட்டுமே சொந்தம். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு ஆதரவு தந்துள்ளது, என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
சபரிமலை பிரச்னை குறித்து திருவனந்தபுரத்தில் அவர் கூறியதாவது:சபரிமலையை சிலர் வன்முறையின் கூடாரமாக மாற்றி விடலாம் என கனவு காண்கின்றனர். அது நடக்கப் போவதில்லை. சபரிமலையில் அமைதி நிலைக்க வேண்டுமெனில் அங்கு கிரிமினல்கள் இருக்க கூடாது. கிரிமினல்களை வெளியேற்றி உண்மையான பக்தர்கள் தரிசனம் நடத்த வசதி செய்யப்படும். அது அரசின் தலையாய கடமை. சபரிமலை பணிக்காக சென்ற பெண் ஊழியர்களும் தடுக்கப்பட்டனர். போராட்டத்தில் தேவசம்போர்டு ஊழியர்களுக்கும் பங்கு உண்டு என்றால், அது பற்றி தேவசம்போர்டு விசாரிக்க வேண்டும். பிரச்னைகளை ஏற்படுத்தி தீர்ப்பை திருத்த சங்பரிவார் அமைப்புகள் முயற்சி செய்கின்றன. எப்படி ஆனாலும் தீர்ப்பு அமல்படுத்தப்படும். இது அரசின் தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல. நீதிமன்ற தீர்ப்பை எந்த அரசும் அமல்படுத்தி தான் ஆக வேண்டும். கோயில் நடை அடைப்பேன் என தந்திரி கூறியுள்ளார். உதவி பூஜாரிகள் போராட்டம் நடத்தினர். தீர்ப்புக்கு எதிரான செயலை அனுமதிக்க முடியாது. கோயில் நடை
திறப்பதும், அடைப்பதும் தேவசம்போர்டின் அதிகாரத்துக்கு உட்பட்டது. திறக்கப்பட்ட கோயில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை மட்டும்தான் தந்திரி முடிவு செய்ய முடியும். பக்தர்களுக்கு வசதி செய்து கொடுப்பது தேவசம்போர்டு, தந்திரியின் கடமை.சபரிமலையில் உளவுத்துறை தோல்வி அடையவில்லை. சன்னிதானத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் போலீசார் வெற்றி பெற்றுள்ளனர். இதற்காக சட்டசபையை கூட்ட வேண்டிய தேவை இல்லை. சபரிமலை வருவோரின் பக்தியை யாராலும் பரிசோதிக்க முடியாது. ஒரு நபரின் உருவம், செயல்பாடுகளை வைத்து பக்தியை எடை போட முடியாது.சபரிமலை, தேவசம்போர்டுக்கு மட்டுமே சொந்தமானது. வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. பந்தள ராஜ்யத்தையும், சபரிமலை காணிக்கை உட்பட வருமானத்தையும் திருவிதாங்கூர் மன்னருக்கு, பந்தளம் மன்னர் கொடுத்து விட்டார். இப்படித்தான் சபரிமலை உள்ளிட்ட கோயில்கள் அரசின் சொத்தாக மாறின. 1949 ஒப்பந்தப்படி சபரிமலையில் உரிமை உள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்கள் இணைந்த பின் கோயில்கள் தேவசம்போர்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
இதில் பந்தளம் மன்னர் குடும்பத்துக்கு எந்த பங்கும் இல்லை. விழா காலங்களில் உள்ள கடமைகளை மன்னர் குடும்பம் நிறைவேற்றும். அதில் அரசு தலையிடாது. தீர்ப்பை நிறைவேற்றுவதன் மூலம் பக்தர்களை இந்த அரசு மதிக்கிறது என்றுதான் அர்த்தம். பக்தர்கள் அனைவரும் சபரிமலை போகலாம். எதிர்ப்பு என்ற பெயரில் சிலர் பந்தல் கட்டி போராட்டம் நடத்தினர். அதற்கு அரசு எதிர்ப்புதெரிவிக்கவில்லை. ஆனால் சபரிமலைக்கு சென்றவர்களை பரிசோதனை செய்யும் நிலைக்கு சென்றதால்தான் நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது.
பெண்கள், பக்தர்கள், நிருபர்கள் மீது போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். நாங்கள் சொல்வதைதான் வெளியிட வேண்டும்; இல்லா விட்டால் தாக்குதல் நடத்துவோம் என மிரட்டினர். கோயிலுக்கு வந்த பெண்களின் வீட்டில் தாக்குதல் நடத்தினர். சபரிமலையில் அரசியல் லாபம் பெற பா.ஜ.,- காங்., முயற்சி செய்கின்றன. பா.ஜ.,வுடன் இணைந்து செயல்படும் ஒரு கூட்டம் காங்கிரசில் உள்ளனர். இதன்மூலம் காங்., தற்கொலை முயற்சி மேற்கொள்கிறது. சபரிமலை குறித்த தீர்ப்பை அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. அராஜகம் செய்பவர்களை வெளியேற்றி அனைத்து பக்தர்களும் தரிசனம் நடத்த வசதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்லைன் முன்பதிவு?: சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு குறித்து பரிசீலிக்கப்படும், என பினராயி விஜயன் கூறினார்.அவர் கூறியதாவது: பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி செய்வது பற்றி ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு மணி நேரத்திலும் எத்தனை பேர் வருவர், எத்தனை பேர் தரிசனம் நடத்த முடியும் என தெளிவான புள்ளி விபரம் வேண்டும். இதன்படி ஆன்லைன் முன்பதிவு வசதி செய்யப்படும். இதன்மூலம் பக்தர்கள் சன்னிதானத்தில் அதிக நேரம் இருக்க முடியாது. திருப்பதி கோயிலைப் போல ஆன்லைன் முன்பதிவு செய்யப்படும். விரைவில் இதில் முடிவு எட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.