பதிவு செய்த நாள்
10
பிப்
2012
11:02
அவிநாசி : அவிநாசி அருகே ஆலத்தூரில் 2,700 ஆண்டு பழமையான கரிய காளியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலத்தூரில் ஸ்ரீகரிய காளியம்மன் கோவில் உள்ளது. அக்கோவில் குறித்து, கொங்கு சேர மன்னர்கள், 2,700 ஆண்டுக்கு முன் செப்பேட்டில் எழுதியுள்ளனர். அதில், "ஆலபுரி மாதுகரிய காளி என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது ஆலத்தூர் கரிய காளியம்மன் என்று மருவியுள்ளது. அக்கோவில், விஸ்வகர்ம வம்சம், ஜெயின் வம்சத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அதையடுத்து, 335 ஆண்டுகளாக கொங்கு வேளாளர்களால் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் மூலவர் கோபுரம், அர்த்த, மஹா மண்டபங்கள் உள்ளிட்ட பல திருப்பணிகள், தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேக விழா தொடர்பான ஆலோசனை கூட்டம், அறங்காவலர் பாலசாமி தலைமையில் நடந்தது. அதில், திருப்பணி குழு உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள் பங்கேற்றனர்.கும்பாபிஷேக விழா குறித்து, கோவை - பேரூர் மணிவாசகர் திருஅருட்பணி மன்றத்தை சேர்ந்த குமரலிங்கம் கூறுகையில், ""தமிழ் வேத முறைப்படி குடமுழுக்கு அடுத்த மாதம் 5, 6 மற்றும் 7ம் தேதிகளில் நடக்கிறது. வேள்வி பூஜைகளுக்கு பெரியளவில் வேள்வி சாலை அமைக்கப்படும். 7ம் தேதி காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் குடமுழுக்கு நடக்கும். அன்றைய தினம் காலை 7.00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.