பதிவு செய்த நாள்
01
நவ
2018
12:11
ராசிபுரம்: ராசிபுரத்தில், மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி, நகர் முழுவதும் களைகட்டியுள்ளது.
ராசிபுரம், நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா, வரும், 7, 8ல் நடக்கிறது. முதல் நாள் பொங்கல் வைத்தல், மறுநாள் தீ மிதித்தல், தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தீபாவளியை ஒட்டி வருவதால், அந்த வாரம் முழுவதும் திருவிழா கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில், தற்போதே, திருவிழா களை கட்டிவிட்டது. கடைவீதியிலுள்ள அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலை சுற்றி, பொம்மை கடைகள்,
பெண்களுக்கான பொட்டு, கிளிப் அலங்கார கடைகள், வீட்டு உபயோக பொருள் கடைகள், பஜ்ஜி, அப்பளம் கடை என, தற்காலிக கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அதுமட்டுமின்றி குழந்தைகளை கவர, ராட்டினம், கொலம்பஸ், மேஜிக் கப் விளையாட்டுகளை, நிறுவும் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. தினமும் ஒவ்வொரு சமூகம் சார்பில், தீர்த்தக்குடம் எடுத்து வந்து சிறப்பு பூஜை, மண்டகப்படி ஊர்வலம் நடத்தி வருகின்றனர். மாலையில்
பாட்டுக் கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சி என பக்தர்கள் தினமும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இதனால், நாமக்கல் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கிறது.
மாலையில், போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு பக்தர்கள் குவிந்து விடுகின்றனர்.