அன்பர் ஒருவர், “நம்மைப் போலவே மற்ற எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே தீபாவளி கொண்டாடுகிறோம்?” என்று மகாசுவாமிகளிடம் விளக்கம் கேட்டார். “அப்படியல்ல... நாம் துன்பப்பட்டாலும், மற்றவர் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைப்பது தான் தீபாவளியின் தத்துவம்” என்ற மகாசுவாமிகள் அதற்கு விளக்கம் அளித்தார். “பகவான் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்ததைக் கண்ட நரகாசுரனின் தாயார் சத்தியபாமா துக்கப்பட்டாள். என் பிள்ளை போன துக்கம் எனக்கிருந்தாலும், இந்நாளை துக்க நாளாகக் கருதி யாரும் வருந்தக் கூடாது. இந்நாளில் அனைவரும் புத்தாடை அணிந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என கிருஷ்ணரிடம் வரம் கேட்டாள். தான் துன்பப்பட்டாலும் மற்றவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைப்பது எத்தனை உயர்ந்த மனநிலை!” என்றார்.
மேலும் “தீபாவளியன்று எல்லாநீரிலும் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் தான் வீட்டில் நாம் குளித்தாலும் ’என்ன கங்கா ஸ்நானம் ஆயிற்றா’ எனக் கேட்கிறார்கள். வெளி உடம்பைத் தூய்மையாக்கும் புறக்குளியல் முக்கியம் தான். அதை விட முக்கியம் அகக் குளியல். அதாவது நம் மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் குளியல். கடவுளின் திருநாமத்தை ஓயாமல் ஜபிப்பதன் மூலம் மனம் தூய்மையாகும். தீபாவளியை ’பகவத் கீதையின் தம்பி’ என சொல்லலாம். ஏன் தெரியுமா? கீதைகள் பல இருந்தாலும் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன உபதேசம் தான் கீதை என பெயர் பெற்றது போல, பண்டிகை பல இருப்பினும் பெருமையுடன் திகழ்வது தீபாவளி தான். இந்த திருநாளில் கங்கா ஸ்நானம் செய்து உடலைத் தூய்மை செய்வதோடு, இறை நாமங்கள், மந்திரங்களை ஜபித்து மனதையும் தூய்மை செய்ய வேண்டும். அதுவே உண்மையான கங்கா ஸ்நானம். அப்படி செய்தால் தான் தீபாவளி முழுமையாக கொண்டாடியதாக ஆகும்” என்றார் மகாசுவாமிகள். - திருப்பூர் கிருஷ்ணன்