செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அம்மனுக்கு விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
இரவு 11.30 மணிக்கு உற்சவர் அங்காளம்மன், சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேளதாளம் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நடந்த ஊஞ்சல் தாலாட்டின் போது கோவில் பூசாரிகளும், கூடியிருந்த பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். நுாற்றுக்காணக்கான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இரவு 12.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தின் நிறைவாக மகா தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம் மற்றும் அறங்காவலர் குழுவினர் கலந்து கொண்டனர். தீபாவளி பண்டிகை அமாவாசை நோம்பு இருந்த போதும் வழக்கம் போல் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில் செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் உட்பட 400 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, வேலுார், கடலுார், புதுச்சேரி உட்பட பல ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர்.