பதிவு செய்த நாள்
08
நவ
2018
04:11
விழுப்புரம்: விழுப்புரம், அமைச்சார் அம்மன் கோவிலில் நடந்த கேதார கவுரி நோன்பு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் அமைந்துள்ள அமைச்சார் அம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி, கேதார கவுரி நோன்பு பூஜை நேற்று நடந்தது. அதனையொட்டி கோவிலில் காலை 4.00 மணிக்கு அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெண்கள் விரதம் இருந்து அம்மனுக்கு கொண்டு வந்த மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், நோன்பு கயிறுகளை கலசத்தில் ஏந்தி கொண்டு, சுவாமியை சுற்றி வழிபட்டு சென்றனர். பின், இந்த கயிறுகளை, தங்களின் வீடுகளில் உள்ள சுவாமி முன்பு வழிபட்டு, கட்டி கொண்டனர்.
திருக்கோவிலுார்: காலை முதல் விரதமிருந்த பக்தர்கள்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில்‚ வசந்த மண்டபத்தில் கவுரி அம்பாள்ஆவாகனம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த படையல்பொருட்களை பூஜிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இதில் கீழையூர் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நகரின் பல்வேறு கோவில்களில் கேதார கவுரி நோன்பு நடைபெற்றது.
செஞ்சி: கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தன காப்பும், வெள்ளி கவசமும் அணிவித்தனர். காலை 9:00 மணிக்கு கேதார கவுரி கலசம் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜையும், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விரதமிருந்த ஏராளான பெண்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, நோன்பை நிறைவு செய்தனர்.
மயிலம்: மயிலியம்மன் கோவிலில் நேற்று காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பெண்கள் விரதம் இருந்து கொண்டு வந்த மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் நோன்பு கயிறு ஆகியவற்றை கலசத்தில் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் வீட்டிற்கு கொண்டு சென்று பூஜையறையில் வைத்து வழிபட்டு நோன்பு கயிறுகளை கட்டிக் கொண்டனர். இதேபோல் சுற்று வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் கேதார கவுரி நோன்பு பூஜை நடைபெற்றது.
கண்டாச்சிபுரம்: ராமாநாதீஸ்வரர் கோவிலில்,கேதார கவுரி நோன்பை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணி முதல் சவுந்தர்ய ஞானாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து கேதார கவுரி நோன்பு பூஜை நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் கலச பூஜை நடத்தினர்.