துாத்துக்குடி, : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.அறுபடை வீடுகளில் இரண்டாவது இக்கோயிலில் கந்தசஷ்டிவிழா யாக சாலை பூஜையுடன் நேற்று காலை தொடங்கியது. இரவு 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு யாக சாலைக்கு, வள்ளி, தெய்வானையுடன், ஜெயந்திநாதர் எழுந்தருளினார். 7:30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. மதியம் 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.மாலை 4:00 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா சென்று கோயிலை சேர்ந்தார். 6-ம் திருநாளான நவ. 13-ம் தேதி மாலை 4:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 7-ம் திருநாளான நவ. 14- இரவு 11:00 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.விழா நாட்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. நவ.19-ம் தேதி மாலை 4:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.