சுவாமிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2018 11:11
தஞ்சாவூர், சுவாமிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 13 -ம் தேதி நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடான சுவாமிநாத சுவாமி கோவில் புகழ்பெற்றது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்வித்ததால் சிவகுருநாதனாக விளங்கும் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்விழா நேற்று காலை சண்முகசுவாமி நவவீரர்கள், பரிவாரங்களுடன் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி விழா தொடங்கியது. தொடர்ந்து 17-ம் தேதி வரை காலை, மாலை இரு வேளையும் சுவாமி வீதிவுலா நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 13-ம் தேதி காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 5.30 மணிக்கு சிறப்பு தீபாரதனையும், 6 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பட்டு அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கி சூரசம்ஹாரத்துக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு சன்னதி தெரு மற்றும் தெற்கு வீதியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவ்விழாக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.