பதிவு செய்த நாள்
09
நவ
2018
12:11
திருப்போரூர்: திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காலை, 8:00 மணிக்கு, கோவில் வட்ட மண்டபத்தில், உற்சவர் கந்தசுவாமி பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.
பின், கொடி மரம், கொடி உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. காலை, 9:45 மணிக்கு, கோவில் சிவாச்சாரியார்களால், உற்சவ கொடி ஏற்றப்பட்டது. பின், 10:40 மணிக்கு, உற்சவர் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் அ.தி.மு.க., – எம்.பி., மரகதம் குமரவேல், கோவில் செயல் அலுவலர் சக்திவேல் உட்பட, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆறு நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டியில், பிரதான விழாவான, 13ம் தேதி, சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதே போல், காஞ்சி புரம், குமர கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. விழாவை ஒட்டி, லட்சார்ச்சனை நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவிற்காக, தினமும் மாலையில் நவ வீரர்களான வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேஸ்வரர், வீரபுராந்தகர், வீரராக்கதர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் ஆகியோர் வேடம் அணிந்து, சிறுவர்கள் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, பரமசிவம் தெரு, பாண்டவப்பெருமாள் கோவில் தெரு, சுற்றி கோவிலை சென்றடைவர். அதன் பின், சுவாமி புறப்பாடு நடைபெறும். இதற்காக நேற்று காலை, அந்த ஒன்பது சிறுவர்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும், 13ம் தேதி செவ்வாய்கிழமை காலை, காமாட்சி அம்மன் கோவிலில் சக்திவேல் பெற்று, இரவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.