Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனின் ராத்திரி சிவராத்தி! சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிறப்பான தலங்கள்! சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய ...
முதல் பக்கம் » மகா சிவராத்திரி
சிவராத்திரி கொண்டாடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2012
01:02

சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும். லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வென்னீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித்து, தாழம்பூக்களாலும் மற்றும் பிற மலர்களாலும் அலங்கரிக்க வேண்டும். இந்த ஒரு காலம் தவிர, வேறு தருணங்களில் தாழம்பூவை சிவபெருமானுக்கு அணிவிக்கலாகாது. நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும். மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள இருநிலனாய் தீயாகி எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.

சிவராத்திரி கொண்டாடுவது ஏன்?

பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது தேவி சிவனிடம்,  உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது? என்று கேட்டாள். மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு மிகவும் பிரியமானது. அந்நாளே மகாசிவராத்திரி. அன்று உபவாசம் (பட்டினி) இருப்பது சிறப்பு. அன்றிரவு ஜாமங்களில் நான்குகால பூஜை நடத்த வேண்டும். வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது, என்றார். சிவபெருமானின் விருப்பமறிந்த தேவி, தன் தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற, எல்லா கோயில்களிலும் மகாசிவராத்திரி பூஜை நடத்தத் தொடங்கினர். விரதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சிவராத்திரி விரதம். இவ்விரதத்தின் பெருமையைக் கேட்டு யமனும் நடுங்குவதாகவும், எல்லா யாகங்களையும் எல்லா தருமங்களையும்விட மிக உயர்ந்த விரதம் எனவும் கருதப்படுகிறது.

சிவராத்திரி விரதமுறை: சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிடவேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும். இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.

நான்கு கால பூஜைகள்: சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய சிறப்பான அபிஷேக, அலங்காரம், நிவேதனம் ஆகியவற்றை பெரியோர்கள் வகுத்துள்ளனர். அதன்படி சிவ வழிபாடு செய்வது நலம்பயக்கும். முதல் காலம்: அபிஷேகம் - பஞ்சகவ்யம். மேற்பூச்சு - சந்தனம். வஸ்திரம்-பட்டு. ஆடையின் வண்ணம் - சிவப்பு, நிவேதனம் - காய்கறிகள், அன்னம். வேதம் - ரிக். திருமுறை பஞ்ச புராணத்துடன் பாட வேண்டியது - சிவபுராணம். தீபம் - விளக்கெண்ணெய். தத்வ தீபம் - ரதாரத்தி. அட்சதை - அரிசி. மலர் - தாமரை. பழம் - வில்வ பழம்.

இரண்டாம் காலம்: அபிஷேகம் - பஞ்சாமிர்தம். மேற்பூச்சு - பச்சைக்கற்பூரம். வஸ்திரம் - பருத்தி. ஆடையின் வண்ணம் - மஞ்சள், நிவேதனம் - பரமான்னம், லட்டு. வேதம் - யஜூர். திருமுறை பஞ்ச புராணத்துடன் பாட வேண்டியது - இருநிலனாய்... பதிகம். தீபம் - இலுப்பை எண்ணெய். தத்வ தீபம் - ஏக தீபம். அட்சதை - யவை. மலர்கள் - தாமரை, வில்வம். பழங்கள் - பலாப்பழம்.

மூன்றாம் காலம்: அபிஷேகம்- தேன். மேற்பூச்சு - அகில். வஸ்திரம் - கம்பளி. ஆடையின் வண்ணம் - வெள்ளை, நிவேதனம் - மாவு, நெய் சேர்த்த பலகாரங்கள், பாயசம். வேதம் - சாமம். திருமுறை பஞ்ச புராணத்துடன் - லிங்கபுராண குறுந்தொகை. தீபம் - நெய். தத்வ தீபம் - கும்ப தீபம். அட்சதை - கோதுமை. மலர்கள் - அறுகு, தாழம்பூ. பழங்கள் - மாதுளை.

நான்காம் காலம் : அபிஷேகம் - கருப்பஞ்சாறு. மேற்பூச்சு - கஸ்தூரி. வஸ்திரம் - மலர் ஆடை. ஆடையின் வண்ணம் - பச்சை. நிவேதனம் - கோதுமை, சர்க்கரை, நெய் கலந்த பலகாரங்கள். வேதம் - அதர்வணம். திருமுறை பஞ்ச புராணத்துடன் - போற்றித் திருத்தாண்டகம். தீபம் - நல்லெண்ணெய். தத்வ தீபம் - மகாமேரு தீபம். அட்சதை - உளுந்து, பயறு முதலான ஏழு தானியங்கள். மலர்கள் - எல்லா வகை மலர்களாலும். பழங்கள் - வாழை முதலிய அனைத்து வகைப்பழங்களும்.

சிவராத்திரியன்று இரவில் விழித்திருக்கும் போது, பாட வேண்டிய எளிய பாடல்கள்

சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்றிடச் சிவகதி தானே.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே!

உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சிஏகம்பனே!

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!

சிவராத்திரி விரத மகிமை: விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும்.  மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.

சிவனுக்குரிய விரதங்கள்: சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு அவையாவன:

சோமவார விரதம்: திங்கட்கிழமை
திருவாதிரை விதரம்: மார்கழி திருவாதிரை
மகா சிவராத்திரி: மாசி தேய்பிறை சதுர்த்தசி
உமா மகேஸ்வர விரதம்: கார்த்திகை பவுர்ணமி
கல்யாண விரதம்: பங்குனி உத்திரம்
பாசுபத விரதம்: தைப்பூசம்
அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி
கேதார விரதம்- தீபாளி அமாவாசை

நிறைவே காணும் மனம் வேண்டும் சிவனே அதை நீ தரவேண்டும்
-சிவராத்திரி பிரார்த்தனை

உலகாளும் இறைவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வவளம் தருவாயாக.

பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலைமேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.

ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள வருவாயாக.

ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! பிறவிக்கடலில் இருந்து மீட்பவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.

மங்கள லட்சணம் உடையவனே! பயத்தைப் போக்குகின்றவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.

புண்ணியம் செய்தவர்களுக்கு முகத்தைக் காட்டுபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.

தேவர்களின் தெய்வமே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி  அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழைத் தந்தருள்வாயாக.

திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பி யவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டிய நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.

கிரகங்களால் ஏற்படும் சிரமத்தைப் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினையை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! பாரெலாம் ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும், அங்கெல்லாம் வந்து எங்களோடு இருந்து பாதுகாப்பாயாக.

இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபவனே! பாவங்களைத் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! கைலாய நாதனே! நிறைவான மனதைத் தந்தருள்வாய்.

ஐந்தெழுத்து நாயகனின் ஐந்து அடையாளம்: சிவபெருமானுக்குரிய அடையாளங்கள் ஐந்து. அவை ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், ஐந்தெழுந்து மந்திரம். சிவராத்திரியன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜெபித்தபடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன.

செல்வம் தரும் சிவராத்திரி: மகாபாரதம் சாந்தி பர்வத்தில் சிவராத்திரியின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர், சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு சொன்னார். இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. அஷ்டவக்கிர முனிவர் ஒரு சிவராத்திரி நாளில் மன்னனைச் சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னன் முனிவரிடம், ஐயனே! நான்  சுஸ்வரன் என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கிவிட்டேன். மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசிமயக்கத்தால் தூக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பொழுது புலர்ந்து விட்டது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கிய பின், இரு சிவதூதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் உனக்கு நற்கதி கிடைத்தது என்றனர். அதனால், நாடாளும் மன்னனாக சித்திரபானு என்ற பெயரில் இப்பிறவியில் பிறக்கும் பேறு பெற்றேன், என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பர். அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும்.

ஆலால கண்டா! அற்புத சுந்தரா!

பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தில் இருந்த மிகுந்த உஷ்ணம் கிளம்பியது. செய்வதறியாது தவித்த தேவர்கள், கருணைக்கடலான சிவனிடம் ஓடினார்கள். தங்கள் முயற்சியினால் உண்டான முதல்பயனான விஷத்தை இறைவனே ஏற்று அருளும்படி வேண்டினர். சிவன் தன் அருகில் இருந்த நண்பர் சுந்தரரிடம் பாற்கடலில் எழுந்த விஷத்தைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். அவரும் சிவமந்திரம் ஜெபித்து அவ்விஷத்தை நாவற்கனி போல உருட்டி வந்து கொடுத்தார். சிவன் அதை விழுங்கி விட்டார். இதனைக் கண்ட தேவர்கள் ஆலாலகண்டா அற்புத சுந்தரா என்று கோஷமிட்டனர். விஷத்தைத் திரட்டி அற்புதம் நிகழ்த்தியவர் என்பது இதன் பொருள்.

நினைக்க முடியாத வாழ்நாள்: புராணங்களில் முப்பத்து  முக்கோடி தேவர்கள், நாட்கள் பற்றியெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. முப்பத்து முக்கோடி என்றால் 33 கோடி அல்ல. 33 என்ற எண்ணுக்குப் பிறகு 26 பூஜ்யங்கள் சேர்ப்பது என்ற கருத்து உண்டு. அந்த  அளவுக்கு வாழ்ந்தவன் ராவணன். சிவபக்தனான இவன், சிவதரிசனத்தை நேரில் பெற தன் ஒன்பது தலைகளை வெட்டி காணிக்கையாக்கினான். அப்படியும், சிவன் வராமல் போகவே பத்தாவது தலையையும் வெட்ட முயன்ற போது, சிவன் காட்சி தந்தார். அவரிடம் முப்பத்து முக்கோடி நாட்கள் வாழும் வரத்தைப் பெற்றான். அவன் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் ஒரு லிங்கம் சமைத்து வழிபட்டான். இலங்கையில் இருந்த இந்த லிங்கங்கள் கடல் கோளினால் அழிந்திருக்க வேண்டும் என்கின்றனர்.

இணைந்த இருவிஷங்கள்: தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷம் கக்கியது. அப்போது கடலில் இருந்தும் விஷம் வெளிப்பட்டது. இருவித விஷங்களும் ஒன்று சேர்ந்தன. ஆலம் என்பதற்கு விஷம் என பொருள். இருவிஷங்கள் இணைந்தால் அதனை ஆலாலம் என்று குறிப்பிட்டனர். இதுவே பேச்சுவழக்கில் ஆலகாலம் என்று திரிந்துவிட்டது.

அரைக்கண்ணின் இடதுகை ரகசியம்: கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள இறைவன் காளத்திநாதர். இவரது கண்ணில் ரத்தம் வழிந்ததைக் கண்ட கண்ணப்பர், தன் வலக்கண்ணை அகழ்ந்து அப்பினார். பின் இடக்கண்ணிலும் ரத்தம் வழிந்தது. கண்ணப்பர், தன் இடக்கண்ணையும் அகழ்ந்து எடுக்க முயற்சித்தார். ஆனால், சிவலிங்கத்தின் இடப்பாகத்தில் இருந்து ஒரு கை முளைத்து எழுந்தது. நில்லு கண்ணப்பா! என்று அசரீரி ஒலித்து அவரைத் தடுத்தது. இடக்கை அவரைத் தடுக்க காரணம் உண்டு. சிவனின் இடப்பாகம் அம்பிகைக்கு உரியது. தன் பிள்ளை போன்ற கண்ணப்பன் அவதிப்படுவதைக் காண தாயின் மனம் பொறுக்கவில்லை. அதனால், அவரைத் தடுத்து அருள்செய்தாள். முக்கண்ணர் என்று சிவபெருமானைக் குறிப்பிட்டாலும் காளஹஸ்தியில் சிவனுக்குரியது  அரைக்கண் மட்டுமே. ஈசனின் உடலில் சரிபாதி தேவி என்பதால், ஒன்றரைக்கண் தேவிக்குரியது. காளத்திநாதரின் வலக்கண்ணோ கண்ணப்பரிடம் பெற்றது. அதனால், நெற்றிக்கண்ணின் வலப்பகுதி மட்டுமே இறைவனுக்குரியதாக இருக்கிறது.

ஐந்து கோலம் ஐந்து பலன்: சிவபெருமான் கோயில்களில் உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூவகைநிலைகளில் காட்சிதருகிறார். கருவறையில் பெரும்பாலும் அருவுருவத்திருமேனியான சிவலிங்கமாகவே வீற்றிருப்பார். அருவத்திருமேனியாக (உருவமே இல்லாத நிலை) சிதம்பரம், திருப்பெருந்துறை போன்ற கோயில்களில் அருள்புரிகிறார். உருவத்திருமேனியை சிவமூர்த்தங்கள் என்று குறிப்பிடுவர். இம்மூர்த்தங்களில் ஐந்துமூர்த்தங்கள் மிகவும் சிறப்புடையவை.

1.நமக்கு என்ன பலன் தேவையோ அதற்கேற்ற வடிவத்தில் சிவபெருமானை வழிபட்டு பலன் பெறலாம். சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள் மனஅமைதியும் ஞானமும் கைவரப்பெறுவர்.
2. வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால் முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும்.
3.வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக சிவனை வழிபட்டால் எதிரித்தொல்லை நீங்கி தைரியம் உண்டாகும்.
4.ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால் மனமகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும்.
5.அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க முருகன் நடுவில் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தமூர்த்தியை. தரிசித்தால் வாழ்வில் நிம்மதியும்,
மனநிறைவும் ஏற்படும்.

லிங்கம் உருவான சிவராத்திரி: சிவன் அபிஷேகப் பிரியர். சிவராத்திரியன்று அவருக்கு அபிஷேகம் நடந்த வண்ணம் இருக்கிறது. சிவலிங்கம் ஏன் வட்ட வடிவமாக இருக்கிறது தெரியுமா? வட்டமான ஸ்வரூபத்துக்குத் (வடிவம்) தான் அடி முடியில்லை. ஆதியில்லை, அந்தமுமில்லை. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது. இது சரியான வட்டமாக இல்லாமல், நீள் வட்டமாக இருக்கிறது. பிரபஞ்சமே நீள் வட்டமாகத் தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை எடுத்துக் கொண்டாலும் கிரகங்களின் அயனம் (பாதை) நீள் வட்டமாகத்தான் இருக்கிறது, என்று நம் நவீன விஞ்ஞானம் சொல்வதும், ஆவிஸ்புரத் என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ஒற்றுமையாக இருக்கிறது. அன்போடு பக்தி செய்து உருகினால், சிவன் விரைவில் அகப்பட்டு விடுவார். அன்பினால் மிகமிக விரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் என்பதால், அவருக்கு ஆசுதோஷி என்று ஒரு பெயர் இருக்கிறது. கேட்ட மாத்திரத்தில் அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல் தான் ஆசுதோஷி. சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்தது (உருவானது) சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில். அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து (உள் வாங்கி) அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதை விட ஆனந்தம் வேறு இல்லை.
-காஞ்சிப் பெரியவர் விளக்கம்

ருத்ராட்சம் பிறந்த கதை: சிவபக்தர்கள் ருத்ராட்சத்தை தங்கள் உயிர் மூச்சாகக் கருதுகின்றனர். திரிபுராசுரனால் துன்பப்பட்ட தேவர்களைக் காக்க, சிவபெருமான் கண்களை மூடாமல் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். அகோர அஸ்திரம் என்ற ஆயுதத்தை தயார் செய்ய கண்களை மூடும்போது, அவரது மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. அது பூமியில் பட்டதும் ஒரு மரம் தோன்றியது. அந்த மரத்தில் இருந்து விழுந்த பழம் தான் ருத்ராட்சம். ருத்ரனாகிய சிவனின் கண்களில் இருந்து உண்டானதால் இப்பெயர் உண்டானது.

துளையுள்ள ஒரே விதை: ருத்ராட்ச மரத்தின் விதைக்கு தனிச்சிறப்பு உண்டு. மற்ற விதைகளில் துவாரம் இருக்காது. துளசி அல்லது ஸ்படிக மணிகளை துளையிட்ட பிறகே கோர்க்க முடியும். ஆனால், இயற்கையிலேயே துளை உள்ளது ருத்ராட்சம். எல்லா மனிதர்களும் இதை எளிதாக அணிய வேண்டும் என்ற அடிப்படையில் இறைவன் இப்படி செய்திருக்கிறார். ஜாவா தீவு, நேபாளம், பெங்களூருவில் ருத்ராட்ச மரம்
வளர்கிறது. இது வியாதியை போக்கும் தன்மை கொண்டது. ருத்ராட்சத்தை ஊற வைத்த நீரில் மஞ்சள்பொடி சேர்த்து குடித்தால் வாந்தி, இருமல் நீங்கும். உஷ்ணம் தணியும்.

திரும்பத் திரும்ப பயன்படுத்தும் இலை: வில்வம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடம். வில்வ இலையால் சிவனை பூஜிக்க மோட்சம் கிடைக்கும். இதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது, ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்திய வில்வத்தை நீரில் கழுவி விட்டு மீண்டும் பயன்படுத்தலாம். மூன்று வில்வ இலைகள் சேர்ந்திருப்பதை வில்வ தளம் என்பர். இதனால் சிவனை பூஜிப்பது சிறப்பானது. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வம் பறிக்கக் கூடாது. வில்வம் மருத்துவ குணம் உடையது. காய்ச்சல், இருமலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

25 வடிவம் கோயில்: சிவனுடைய உருவங்களை மகேஸ்வர வடிவம் என்பர். அவர் 25 வடிவங்கள் எடுத்துள்ளார். அவை அமைந்த கோயில்களின் விபரம் தரப்பட்டுள்ளது. அடைப்புக்குறிக்குள் மாவட்டங்களின் பெயர்.

சோமாஸ்கந்தர் -  திருவாரூர்
நடராஜர் -  சிதம்பரம்
ரிஷபாரூடர் -  வேதாரண்யம்
கல்யாணசுந்தரர் -  திருமணஞ்சேரி
சந்திரசேகரர் -  திருப்புகலூர் (திருவாரூர்)
பிட்சாடனர் -  வழுவூர் (நாகப்பட்டினம்)
காமசம்ஹாரர் -  குறுக்கை
கால சம்ஹாரர் -  திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
சலந்தராகரர் -  திருவிற்குடி
திரிபுராந்தகர் -  திருவதிகை (கடலூர்)
கஜசம்ஹாரர் -  வழுவூர் (நாகப்பட்டினம்)
வீரபத்திரர் -  கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர்
 -  (நாகப்பட்டினம்)
தட்சிணாமூர்த்தி -  ஆலங்குடி (திருவாரூர்)
கிராதகர் -  கும்பகோணம் (கும்பேஸ்வரர் கோயில்)
கங்காளர் -  திருச்செங்காட்டங்குடி( திருவாரூர்)
சக்ரதானர் -  திருவீழிமிழலை (திருவாரூர்)
கஜமுக அனுக்கிரக
மூர்த்தி -  திருவலஞ்சுழி (திருவாரூர்)
சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
ஏகபாதமூர்த்தி -  மதுரை
லிங்கோத்பவர் -  திருவண்ணாமலை
சுகாசனர் -  காஞ்சிபுரம்
உமா மகேஸ்வரர் -  திருவையாறு (தஞ்சாவூர்)
அரியர்த்த மூர்த்தி -  சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
அர்த்தநாரீஸ்வரர் -  திருச்செங்கோடு (நாமக்கல்)
நீலகண்டர் -  சுருட்டப்பள்ளி( ஆந்திரா)

வேகமான பயணத்துக்கு...

நால்வழிச்சாலையில் குறித்த இடத்திற்கு விரைந்து செல்வது போல, பிறவிப்பயணத்தை விரைவில் முடிக்க சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் வழி காட்டியுள்ளனர். தேவாரம், திருவாசகப் பாடல்கள் பாடுவோர் பிறவித்துன்பத்தை விரைவில் களையலாம். அத்துடன், ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய சிவாயநம என்பவற்றையும் தினமும் சொல்ல வேண்டும். அவ்வையார், தனது நீதிநூலான நல்வழியில், சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை, என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவனை பித்தா என்பது ஏன்?

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடலே இது தான். இறைவனை இவர் பித்தன் என அழைக்கக்  காரணம் என்ன தெரியுமா?

சுந்தரருக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், அவரை ஆட்கொள்ள நினைத்த சிவன், முதியவர் வேடத்தில் வந்தார். சுந்தரர் தன் முன்னோருக்கும், தனக்கும் அடிமை என்றார். ஏ பித்தனே! நீ யார்? என்ன உளறுகிறாய்? என்று சுந்தரர் கடிந்து கொண்டார். பின்பு தான் வந்தது சிவன் என்ற உண்மை புரிந்தது. தன்னைப் பாடும்படி சிவன் கேட்கவே, என்ன சொல்லி ஆரம்பிப்பது என சுந்தரர் குழம்பினார். என்னை பித்தன் என்று திட்டினாயே! அந்த வார்த்தையிலேயே துவங்கு, என்றார்.சுந்தரரும் அந்த வார்த்தையின் அர்த்த புஷ்டியைப் புரிந்து கொண்டார். சிவனின் தலையிலுள்ள கங்கை மூன்று முறை தான் மனிதர்களின் பாவத்தைப் பொறுப்பாள். ஆனால், அவரது துணைவி பார்வதியோ, எத்தனை தடவை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வாள். எத்தனை தடவை தப்பு செய்தாலும் பொறுப்பவளை தலையில் வைத்து கொண்டாடாமல், குறைந்த தடவை பொறுப்பவளை, சிவன் தனது தலையில் வைத்துக் கொண்டாடுகிறார். இத்தகைய புரிந்து கொள்ள முடியாத செயல்களைச் செய்வதால் அவரைப் பித்தன் என்றார் சுந்தரர்.

 
மேலும் மகா சிவராத்திரி »
temple news
நவராத்தியின் ஒன்பது நாட்களும் அம்மனை பலவிதமாக அலங்காரங்கள் செய்தும், துதிகள் பாடியும் அவள் அருளைப் ... மேலும்
 
temple news
ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் ... மேலும்
 
temple news
அர்ஜுனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதி+சிவன்) என்ற அஸ்திரத்தைப் பெற்றான். கண்ணப்ப நாயனார் குருதி வடியும் ... மேலும்
 
temple news
சிவராத்திரியன்று புராணத்தோடு தொடர்புடைய தலங்களில் இறைவனை தரிசிப்பதால் கோடான கோடி புண்ணியம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar