பதிவு செய்த நாள்
09
நவ
2018
01:11
காளையார்கோவில்: காளையார்கோவிலில் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டுமென, கோரிக்கை எழுந்தது.
காளையார்கோவில் காளீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நடுவில் மைய மண்டபம், அதை சுற்றி 4 முனைகளிலும் சிறிய மண்டபங்கள் உள்ளன. பதினொன்றே கால் ஏக்கரில் உள்ளது. நீர்வரத்தின்றி 12 ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது. வாரச்சந்தை மைதானம் பின்புறம் உள்ள கால்வாய், போலீஸ் ஸ்டேனுஷன் ரோடு, சோமசுந்தரம் நகர் பகுதியின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள கால்வாய் வழியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருகிறது. 70 அடி அகலமான இந்த கால்வாய், ஆக்கிரமிப்பால் 10 அடியாக குறுகியுள்ளது.
மேலும் பல இடங்களில் கால்வாய் வழித்தடத்தை மாற்றி, ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை கட்டினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாததால், தெப்பக்குளத்தில் இரு இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து , நிரப்ப அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர்.
ஆழ்குழாய் மூலம் நீரை உறிஞ்சினால் தெப்பக்குளம் சுற்றுச்சுவர், கோயில் கோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என, புவியல் ஆய்வாளர்கள் எச்சரித்ததால், இத்திட்டம் கைவிடப்பட்டது.
திருக்கானப்பேர் அன்பர்கள் குழு பழனி கூறியதாவது: காளீஸ்வரர் கோயில் கோபுரத்தின் நுழைவு வாயிலின் மேற்புறத்தில் கல் விரிசலடைந்துள்ளது. ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சினால், கோபுரத்திற்கே ஆபத்தாக முடியும். வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் கொண்டு வர வேண்டும், என்றார்.
சிவகங்கை தெப்பக்குளம் பெரியாறு தண்ணீர் மூலம் நிரப்பப்பட்டது. அதேபோல், காளையார் கோவில் தெப்பக்குளத்தையும் நிரப்ப அமைச்சர், கலெக்டர் எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்தது.