பதிவு செய்த நாள்
10
நவ
2018
02:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்த, பழைய உற்சவர் சிலை, சிதிலம் அடைந்ததாக கூறி, புதிய சிலை செய்யப்பட்டது.இந்த சிலை செய்ததில், தங்கம் சேர்ப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர்.
கோவில் ஸ்தானிகர்கள், செயல் அலுவலர் உட்பட ஒன்பது பேர் மீது, வழக்கு பதிந்தனர். புதிய சிலையை ஆய்வு செய்த போலீசார், அதில் தங்கம் சேர்க்கப்படவில்லை என, தெரிவித்தனர். இதை தொடர்ந்து, கடந்த மாதம், புதிய உற்சவர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு போலீசார், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதி முன் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப் படுகிறது.தற்போது, நீதிமன்ற பாதுகாப்பில் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. இதனால், தீபாவளி அன்று நடக்கும் சுவாமி புறப்பாடு நடைபெறவில்லை.
அடுத்தாண்டு, பொங்கல் தினத்தன்று, திம்மசமுத்திரம் பார் வேட்டை உற்வசம் நடைபெறும். இத்திருவிழாவிற்கு முன், புதிய சிலை காஞ்சிபுரம் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து, அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி கூறியதாவது:கும்பகோணத்திற்கு கொண்டு சென்ற புதிய உற்சவர் சிலையை, மீண்டும் ஏகாம்பரர் கோவிலில் ஒப்படைத்தால் தான், உற்சவ காலங்களில், சுவாமி புறப்பாடு நடைபெற வாய்ப்பு உள்ளது.பழைய சிலை சிதிலம் அடைந்து விட்டதால் வழிபாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அரசு, விரைவில் இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.