திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று (நவ., 12) மாலை 6:30 மணிக்கு நடக்கிறது. இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி நாளை சூரசம்ஹாரலீலை நடக்கிறது. இதற்காக இன்று வேல் வாங்குதல் நடக்கும். சத்திய கிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருள்வார். மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து, திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டப்படும்.அம்பாள் கரத்திலிருக்கும் நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு, நந்தியை வலம் வந்து சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சாத்துப்படி செய்யப்படும். தீபாராதனை முடிந்து சுவாமி பூச்சப்பரத்தில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து அருள்பாலிப்பார்.