பதிவு செய்த நாள்
12
நவ
2018
11:11
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நடந்து வரும் கந்த சஷ்டி விழாவில், நான்காம் நாளான நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக் கோவிலில் குவிந்ததால், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா, 8ம் தேதி துவங்கியது. தினமும், காலை, 8:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப் பெருமானுக்கு லட்சார்ச்சனை நடந்து வருகிறது. நாளை, மாலை, உற்சவர் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனை நடக்கிறது. இம்மாதம், 14ம் தேதி நண்பகல், 11:00 மணிக்கு, உற்சவருக்கு, திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளான நேற்று, மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதுதவிர விடுமுறை நாள் ஞாயிறு மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பக்தர்கள் குவிந்திருந்தனர். மூலவரை பொதுவழியில் தரிசிக்க, மூன்று மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தாலும், போதிய போலீஸ் பாதுகாப்பு போடாததால், பக்தர்கள் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டு, கடும் சிரமத்துடன் மூலவரை தரிசித்தனர்.