பதிவு செய்த நாள்
12
நவ
2018
11:11
திருவண்ணாமலை : மகா தீப திருவிழாவை முன்னிட்டு, வரும், 22ல் திருவண்ணாமலை மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட உள்ளது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவில், 23ம் தேதி, காலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை எதிரே, ஏகன் அனேகன் என்பதை விளக்க, பரணி தீபம் ஏற்றப்படுகிறது.அன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், அனேகன் ஏகன் என்பதை விளக்கி, மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.இதற்காக, 6 அடி உயரமுள்ள, ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்றப்படும் மகா தீபம், 40 கி.மீ., துாரம் வரை பார்க்க முடியும்.தீபம் ஏற்றும் போது, வெப்பத்தால் கொப்பரை சேதமடையாமல் இருக்க, மேல்பாகம் 3.75 அடி, கீழ்பாகம், 2.75 அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில், 20 வளைய இரும்பு ராடுடன் கூடிய, செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது. மேலும், கொப்பரையை மலை உச்சிக்கு எடுத்துச் செல்ல வசதியாக, மேல் பாகம் மற்றும் கீழ் பாகத்தில், தலா, நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இவற்றை புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. 22ல், மலை உச்சிக்கு, கொப்பரை கொண்டு செல்லப்பட உள்ளது.