பழநி: பழநி கந்தசஷ்டி விழாவில் நாளை சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, சூரபத்மன் உள்ளிட்ட நான்கு சூரன்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. பழநி முருகன்கோயிலில் நவ.,8 முதல் 14 வரை கந்தசஷ்டி விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை(நவ.13) நடக்கிறது.
இதற்காக பெரியநாயகியம்மன் கோயிலில் விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் நான்கு அரக்கர்கள் உருவ பொம்மை தயாரிக்கும் பணி நடக்கிறது. பழநி ஸ்பெஷல்: திருச்செந்துாரில் கடற்கரையில் ஒரே இடத்தில் சூரன் உருவத்தில் தலையை மட்டும் மாற்றி, மாற்றி சூரசம் ஹாரம் நடக்கிறது. ஆனால் பழநி மலைக்கோயில் கிரிவீதியில் நான்கு திசைகளிலும் அதாவது முதலில் வடக்கில் தாராகசூரனும், கிழக்கு பானுகோபன்சூரனும், தெற்கு சிங்கமுகாசூரன், மேற்கு சூரபத்மன் வதம் நடக்கிறது. இவ்வாறு 6 அடி உயரம், 4 அடி அகலத்தில் செய்யப்பட்டு தனித்தனியாக சூரன்கள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.