ஸ்ரீபெரும்புதுாரில் மணவாள மாமுனிகளின் 648 வது திருஅவதார உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2018 11:11
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், மணவாள மாமுனிகளின் 648 வது திரு அவதார உற்சவ விழா நேற்று விமரிசையாக நடந்தது.
ஸ்ரீபெரும்புதூரில் வைணவ மகான் ராமானுஜர் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே மணவாள மாமுனிகள் சன்னதி அமைந்துள்ளது. ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திரம் அன்று மணவாள மாமுனிகளின் திரு அவதார விழா, ஆண்டு தோறும் இந்த கோவிலில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மணவாள மாமுனிகளின் 648 வது ஆ ண்டு திரு அவதார உற்சவ விழா நேற்று விமரிசையாக நடந்தது. காலை மணவாள மாமுனிகள் தங்க பல்லக்கிலும், இரவு சேஷ வாகனத்திலும் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முன்னதாகா நேற்று மதியம் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து ஒன்பது கூடங்களில் நீர் எடுக்கப்பட்டு, அவை கோதை யானை மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மணவாள மாமுனிகளுக்கும், ராமானுஜருக்கும் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் கந்தபொடி வசந்தம் நடந்தது. இரவு சாற்று மறை, ஏகாந்த சேவையுடன் மணவாள மாமுனிகளின் உற்சவம் விழா இனிதே நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.